மே.வங்கத்திலும் வெடித்தது குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்- வன்முறையை தவிர்க்க மமதா வேண்டுகோள்
கொல்கத்தா: வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன. அம்மாநிலங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
அஸ்ஸாமில் போராட்டங்களை தூண்டிவிட்டதாக 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குடியுரிமை சட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட் போகிறது அஸ்ஸாம் கன பரிஷத்
முதல்வர் சர்பானந்தா
இந்நிலையில் அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால், மாநில மக்களின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும். மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு தளர்வு
மேலும் அஸ்ஸாமின் குவஹாத்தி, திப்ரூகர் மாவட்டங்களில் இன்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. குவஹாத்தியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருக்கிறது.
|
ரயில் நிலையங்கள் தீக்கிரை
தற்போது வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் ரயில் நிலையங்கள் தீக்கிரையாகின. ரயில் பெட்டிகளும் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மமதா பானர்ஜி அப்பீல்
மால்டாவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இன்று நாடியா, வடக்கு 24 பர்ர்கானா, ஹவுரா மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனிடையே போராட்டங்களில் ஈடுபடுவோர் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
அத்துடன் 60க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள், சமூக இயக்கங்கள் டிச.19-ல் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இக்குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் மனுக்கள் மீது டிசம்பர் 18-ல் விசாரணை நடைபெற உள்ளது.
வெளிநாடுகள் அறிவுறுத்தல்
இப்போராட்டங்களால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பல நாடுகள் தங்களது நாட்டவருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன.