மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வெடித்தது வன்முறை.. 10 பேர் பலி
மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Recommended Video
கொல்கத்தா: மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில், ஒரே கட்டமாக இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நடைபெறும் இந்த பஞ்சாயத்து தேர்தலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்புகளை மீறி வடக்கு 24 பர்கானாஸ், பர்த்வான், கூக் பெஹர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்துள்ளது.
சிபிஎம் கட்சியினர் 3 பேர் பலி
இதனிடையே வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் ஒரு சிபிஎம் தொண்டர் கொல்லப்பட்டார். நடியா, தெற்கு 24 பர்கானாஸ் பகுதியில் சிபிஎம் தொண்டரும் அவரது மனைவியும் கொல்லப்பட்டனர்.
10 பேர் உயிரிழப்பு
பல்வேறு மாவட்டங்களில் வாக்குப்பதிவின் போது நடந்த வன்முறை சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பாஜக நிர்வாகி உயிரிழப்பு
மேலும் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சுஜாபூர் கிராமத்தின் வாக்குச்சாவடியில் பயங்கரவாத கும்பலால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாராபூர் துணை நிர்வாக அலுவலர் திப்யநாராயண் சட்டர்ஜி கூறியுள்ளார். இந்நிலையில் இறந்தவர் பாஜக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
குண்டுவெடிப்பில் பலர் காயம்
கூச் பெஹரில் இரு தரப்பினருக்குமிடையே நடந்த மோதல் சம்பவத்தில் குண்டு வெடித்தது. இந்த மோதல் மற்றும் குண்டு வெடிப்பில் வேட்பாளர் உள்பட பலர் காயமடைந்தனர். தேர்தல் வாக்களிப்பின் போது நடந்த இந்த பயங்கரவாத சம்பவங்களால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
56% வாக்குப்பதிவு
பல இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டுள்ளன. இதனிடையே மாலை 3 மணி வரை 56% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.