அட்டப்பாடியில் கொல்லப்பட்ட மது குடும்பத்திற்கு சேவாக் ரூ.1.5 லட்சம் நிதியுதவி!
கேரளாவில் அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர் மதுவின் குடும்பத்திற்கு கிரிக்கெட் வீரர் சேவாக் நிதியுதவி அளித்துள்ளார்.
திருவனந்தபுரம் : கேரளாவில் அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர் மதுவின் குடும்பத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ரூ. 1.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு வட்டம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மது அரிசி திருடியதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் அடித்துக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனநலம் பாதித்திருந்த மது கையில் மறைத்து எடுத்து வந்த சாக்கு மூட்டையை பார்த்து அவர் அரிசி திருடியதாக இளைஞர்கள் சிலர் மதுவை கொடூரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுவை இளைஞர்கள் ஒன்றுகூடி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பலரும் கண்டனக் குரல் எழுப்பினர். இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் மது கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அப்போதே கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார். ஆனால் தன்னுடைய ட்வீட்டில் முஸ்லிம் இளைஞர்கள் 4 பேரின் பெயரை சேவாக் குறிப்பிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து மன்னிப்பு கேட்டதோடு அந்த ட்வீட்டையும் சேவாக் நீக்கினார்.
இந்நிலையில் மது கொல்லப்பட்டதற்கு வெறும் கண்டனத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மதுவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்துள்ளார். வீரேந்திர சேவாக் அறக்கட்டளை மூலம் மதுவின் தாயார் மல்லியின் பெயருக்கு ரூ. 1.5 லட்சத்திற்கான நிதியுதவி காசோலையை சேவாக் வழங்கியுள்ளார். சேவாக்கின் இந்த மனிதாபிமானமிக்க செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.