ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சேவாக் ஆதரவு.. அறவழி கண்டு வியப்பு! #SaveOurCultureJALLIKATTU
டெல்லி: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தமிழக மக்களின் அறப்போராட்டத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும், அலங்காநல்லூர் போராட்டக்காரர்கள் மீது நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மாநிலம் முழுக்க இளைஞர் படை கிளர்த்தெழுந்துள்ளது.
கமல், ரஜினி, விஜய், சூர்யா உட்பட முன்னணி தமிழ் நடிகர்கள் இந்த போராட்டத்திற்கு துணிச்சலாக ஆதரவை தெரிவித்துள்ளனர். அதேநேரம் தேசிய ஊடகங்கள் இதை கண்டுகொள்ளவில்லை, பிற மாநிலங்களில் இதற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்ற குமுறல் தவிர்ப்பதற்கில்லை.
|
சேவாக் சிக்சர்
இந்த குறைபாட்டை, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தனது சிக்சர் பாணி டிவிட் ஒன்றின் மூலம் போக்கியுள்ளார். சேவாக் இன்று வெளியிட்ட டிவிட்டில், தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் அமைதி வழியில் செல்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அமைதிவழியை தொடருங்கள். இந்த அறப்போராட்டம் எல்லோருக்கும் பாடம் என கூறியுள்ளார்.
|
தேசிய ஊடகங்கள் மீது சாடல்
மற்றொரு டிவிட்டில் தமிழகத்தில் உச்சநீதிமன்றத்தை மதித்தபடியே, நடைபெறும் அமைதி போராட்டம் பற்றிய போட்டோ மீம் ஒன்றை ரீடிவிட் செய்துள்ளார். அந்த மீம் தேசிய ஊடகங்கள் இப்போராட்டத்தை புறக்கணிப்பது குறித்தும் ஆதங்கப்பட்டுள்ளது.
பலன் ஆரம்பம்
சேவாக் வெளியிட்டுள்ள இந்த இரு டிவிட்டுகளும் கண்டிப்பாக தேசிய.. ஏன் சர்வதேச ஊடகங்கள் கவனத்தை கூட ஈர்க்கும் வாய்ப்புள்ளது. ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராடும் தமிழர்களின் பொறுமைக்கு பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது என்றுதான் இதை கூற வேண்டும்.
மத்திய அரசுக்கு அழுத்தம்
கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ஏற்கனவே அறவழி ஜல்லிக்கட்டு போராட்டத்தை பார்த்து வியப்பு தெரிவித்து டிவிட் செய்திருந்தார். முன்னணி வீரர்களும் இதேபோல தங்கள் ஆதரவை தெரிவிக்கும்போது இயல்பாகவே தேசிய அளவில் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.