லலித் மோடிக்கு சுஷ்மா செய்தது மனிதநேய உதவியாம்.. சொல்கிறார் ராஜ்நாத் சிங்.
டெல்லி: ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி போர்ச்சுகல் செல்வதற்கு விசா வழங்குமாறு, பிரிட்டன் அரசை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்டதாக வெளியான தகவல்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சுஷ்மா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தின. ஆனால், இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முறைகேடு, சூதாட்டப் புகார்களில் சிக்கி, இந்தியா அரசால் தேடப்பட்டு வரும் நபரான லலித் மோடி, வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக, 2010-ஆம் ஆண்டில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், போர்ச்சுகலில் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் அவரது மனைவியைப் பார்க்கச் செல்வதற்காக, அவருக்கு நுழைவுஇசைவு வழங்க உதவுமாறு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் எம்.பி. கெய்த் வாஸ், அந்நாட்டுத் துணைத் தூதர் ஜேம்ஸ் பெவன் ஆகியோரிடம் சுஷ்மா பேசியதாக பிரிட்டன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
சுஷ்மாவின் பெயரைப் பயன்படுத்தி, பிரிட்டன் துணைத் தூதருக்கு கெய்த் வாஸ் கொடுத்த நெருக்கடியால், 24 மணி நேரத்தில் லலித் மோடி நுழைவு இசைவு பெற்றார் என்றும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவருக்கு நுழைவு இசைவு வழங்குவதற்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
சுஷ்மாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "லலித் மோடிக்கு நுழைவு இசைவு வழங்கும் விவகாரத்தை சுஷ்மா ஸ்வராஜ் சரியாகவே கையாண்டிருக்கிறார். அவருடைய நிலைப்பாட்டை மத்திய அரசு முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறது.
பிரிட்டன் அரசின் சட்ட விதிகள் அனுமதித்தால் மட்டுமே லலித் மோடிக்கு நுழைவு இசைவு வழங்க வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார். மனிதநேயமுள்ள எவரும் இந்த வழிமுறையைத்தான் பின்பற்றி இருப்பார்கள். சுஷ்மா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது," என்றார் ராஜ்நாத் சிங்.
லலித் மோடிக்கு உதவியது குறித்து சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ள விளக்கத்தில், "மனித நேய அடிப்படையிலேயே லலித் மோடிக்கு உதவினேன். சட்டப்படி ஆராய்ந்து அவருக்கு விசா வழங்குமாறு அந்நாட்டுத் துணைத் தூதரிடம் தெரிவித்தேன். லலித் மோடிக்கு விசா வழங்குவதற்கு பிரிட்டன் அரசு முடிவு செய்தால், இரு தரப்பு உறவில் பாதிப்பு ஏற்படாது," என்று தெரிவித்துள்ளார்.