பார்வையற்றவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ‘இருட்டு திரையரங்கம்’... குஜராத்தில் அறிமுகம்
அகமதாபாத்: கும்மிருட்டில் வாழும் அனுபவத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு தருவதன் மூலம், பார்வையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்தில் குஜராத்தில் புதிய நவீன உணவகத்தோடு கூடிய திரையரங்கம் ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களைக் கவர காலத்திற்கேற்ப தங்களது தொழிலில் மாற்றங்களை செய்வது தொழிலதிபர்களின் வெற்றி ரகசியம். அதே சமயம் புதுமையோடு விழிப்புணர்வை உண்டாக்கும் மாற்றங்களையும் மக்கள் வரவேற்கத் தான் செய்கிறார்கள்.
அந்தவகையில், குஜராத்தில் துளி கூட வெளிச்சம் இல்லாத கும்மிருட்டு திரையரங்கம் மற்றும் உணவகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர் பார்வையற்றோர் சங்கத்தினர்.
கும்மிருட்டு...
இது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைக்கப் பட்டுள்ளது. தங்களது வாடிக்கையாளர்களுக்கு கும்மிருட்டில் வாழும் அனுபவம் எப்படி இருக்கும்? என்பதை தத்ரூபமாக விளக்குவதற்காக இத்தகைய திரையரங்கு மற்றும் உணவகத்தை யோசித்து உருவாக்கியிருக்கிறார்கள்.
எங்கும் கருப்பு....
துளியளவு கூட வெளிச்சம் உட்புகாத வகையில் அதன் சுவர்கள், தரை, மின் விசிறிகள், மேஜை நாற்காலிகள், திரைச்சீலைகள் என அனைத்தும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
ஆர்டர் ப்ளீஸ்...
இருட்டினூடே வாடிக்கையாளர்கள் தட்டுத் தடுமாறி, தங்களது இருக்கைகளை கண்டுபிடித்து அமர வேண்டும். அதோடு, சர்வர்களும் அந்த கும்மிருட்டிலேயே ஆர்டர் எடுத்துக் கொள்கிறார்கள்.
கண்களால் பார்க்க முடியாது...
பரிமாறப் படும் உணவின் அழகை கண்களால் ரசிக்க முடியாது, நாவால் ருசிக்க மட்டுமே முடியும். எனவே, நம்மூர் போல கரப்பான்பூச்சி, வண்டு, புழு என எந்த குற்றச்சாட்டும் அங்கே கூற முடியாது.
சிறிய திரையரங்கம்...
சுமார் 50 பேர் வரை அமரும் வகையில் இந்த திரையரங்கம் அமைக்கப் பட்டுள்ளது. திரையரங்கம் என்பதால் திரையில் படத்தின் மூலம் உருவாகும் ஒளி மூலம் ஓரளவு வெளிச்சம் கிடைக்கும் என நினைத்தால் நீங்கள் ஏமாந்து தான் போவீர்கள்.
செவிக்கு மட்டும்...
காரணம் இந்த திரையரங்கில் திரையில் பிம்பம் எதுவும் தெரியாது. வெறும் சத்தம் மட்டுமே வரும். திரையின் பின்பகுதியிலும், பக்கவாட்டிலும் உள்ள ஸ்பீக்கர்கள் மூலம் படத்தின் கதையை கேட்கலாம்.
தாரே ஜமீன் பர்...
இந்த திரையரங்கில் தற்போது அமீர் கான் நடித்த ‘தாரே ஜமீன் பர்' படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
விழிப்புணர்வு...
கண் பார்வை இல்லாதவர்களின் இருண்ட வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை சராசரி மக்களும் புரிந்துக் கொண்டு, அவர்களுக்கு உதவ அவர்கள் முன்வர வேண்டும். அது மட்டுமின்றி, நம்மை எவ்வித குறைபாடும் இல்லாத முழுமையான மனிதர்களாக படைத்த கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே இந்த திரையரங்கத்துடன் கூடிய ‘இருட்டு உணவகத்தை' பார்வையற்றோர் சங்கம் ஒன்று அமைத்துள்ளது.
நவீன ரக கேமராக்கள்...
அதேசமயம், கும்மிருட்டை சாதகமாக்கி கயவர்கள் யாரும் திருட்டு, சில்மிஷம் போன்ற தீய நோக்கில் செயல்பட்டால் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக ஆங்காங்கே துல்லியமாக கண்காணிக்கும் நவீன ரக கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.