சசிகலாவை இனி 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் ! - சிறை நிர்வாகம் அதிரடி
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இனி 15 நாட்களுக்கு ஒருமுறைதான் சந்திக்க முடியும் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு: சசிகலாவை இனிமேல் பார்வையாளர்களை சந்திக்க அடிக்கடி அனுமதிக்க முடியாது. சிறைத்துறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கைதியை சந்திக்க அனுமதிக்க முடியும் பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது. சசிகலாவிற்காக சிறை விதிகம் மீறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியில் இருந்து மார்ச் 18-ம் தேதி வரை 31 நாட்களில் 28 பார்வையாளர்கள் சசிகலாவை சந்தித்து பேசியது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் சிறைத்துறை விதிகள் மீறப் பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சலுகை கேட்ட சசிகலா
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டவர் சசிகலா. பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். குற்றவாளி சசிகலா சிறைக்கு போனது முதலே தமக்கு ஏகத்துக்கும் சலுகைகள் வழங்க அனுமதி கோரினார். அட்டாச் பாத்ரூம், கட்டில், வீட்டு உணவு என சிறைக்குள் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க நினைத்தார் சசிகலா. ஆனால் சிறை நிர்வாகம் இவற்றுக்கு அனுமதி தரவில்லை.
பார்வையாளர்கள் சந்திப்பு
கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியில் இருந்து மார்ச் 18-ம் தேதி வரை 31 நாட்களில் 28 பார்வையாளர்கள் சசிகலாவை சந்தித்து பேசியது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்தது. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நடராஜன்தான் அதிக முறை குற்றவாளியான மனைவி சசிகலாவை அடிக்கடி சிறையில் சந்தித்துள்ளார். அதேபோல் வழக்கறிஞர்களும் சசிகலாவை அடிக்கடி சிறையில் சந்தித்து பேசியுள்ளனர்.
மன்னார்குடி உறவினர்கள்
லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, டிடிவி தினகரன், அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் வளர்மதி, கோகுல இந்திரா, சிஆர் சரஸ்வதி ஆகியோரும் சசிகலாவை சந்தித்துள்ளனர். அதேபோல் மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலா உறவினர்கள் என்ற போர்வையிலும் பலரும் சந்தித்துள்ளனராம்.
சமூக ஆர்வலர் கடிதம்
இந்நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, சிறைத்துறை விதிகளை மீறி சசிகலாவுக்கு சாதகமாக செயல்பட்ட சிறை அதிகாரிகள் மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என அம்மாநில உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் சிறை அதிகாரிகளும், போலீசாரும் அச்சமடைந்துள்ளனர்.
அனுமதி மறுப்பு
இந்நிலையில் சசிகலாவின் உறவினர்கள் விவேக், ராஜ ராஜன், சிவகுமார், கார்த்திகேயன் மற்றும் அதிமுக (அம்மா) கட்சியினர் சசிகலாவை சந்திக்க சனிக்கிழமையன்று அனுமதி கோரி உள்ளனர். ஆனால் சிறை அதிகாரி, இனிமேல் அடிக்கடி சசிகலாவை சந்திக்க அனுமதிக்க முடியாது. சிறைத்துறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கைதியை சந்திக்க அனுமதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் முயற்சி
இதனிடையே அதிமுக (அம்மா) கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி மூலம் சிறைத்துறை அதிகாரிகளிடம் பேச சசிகலாவின் உறவினர்கள் முயற்சித்து வருகின்றனர். அவருக்கு எந்த வித சலுகைகளும் அளிக்க முடியாது என்றும் சிறை நிர்வாகம் மறுத்து விட்டது.