விஸ்வநாதன் ஆனந்த்துக்கு டாக்டர் பட்டம்... கான்பூர் ஐஐடி கௌரவம்
கான்பூர்: 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு, ஐஐடி டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.
கான்பூர் ஐஐடி-யில் 49-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது 5 முறை செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்க்கு (46) என்ஐடிஐ சேரமன் அரவிந்த் பனகாரியா டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தார். விஸ்வநாதன் ஆனந்த்தை கொளரவம் செய்யும் வகையில் அவருக்கு அறிவியல் புலத்தில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டத்தை பெறும் போது விஸ்வநாதன் ஆனந்த், தான் 1985-ம் ஆண்டு பெற்ற அர்ஜுனா விருதை நினைவு கூர்ந்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த உடைகளானது, கடந்த காலத்தில் தான் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றதை நினைவு படுத்துகிறது.
1987-ம் ஆண்டில் நான் இந்திய கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றபோதிலும், உலக சாம்பியன் ஆக வேண்டும் என்பதற்காக தொடர்சியாக முயற்சி மேற்கொண்டேன். அதேபோல இன்று பட்டம் பெறும் நீங்கள் மகிழ்சியாக கொண்டாடுங்கள் ஆனால் உங்களது அடுத்த இலக்கில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்.
இன்று வரை நான் செஸ் விளையாட்டில் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன், எனென்றால் நாம் என்னென்ன கற்றுக் கொள்கிறோமோ அது ஒருபோதும் வீணாகாது. அது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் என்று கூறினார்.