அடேங்கப்பா.. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு தனியாக நவீன கிச்சன் உருவாக்கிய அதிகாரிகள்!
சசிகலாவுக்குக்கென்று பெங்களூர் சிறையில் தனி கிச்சன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், டிஜிபிக்கு டிஐஜி அறிக்கை வழங்கியுள்ளார்.
பெங்களூர்: பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு தனி சமையலறையை சிறை துறை அதிகாரிகள் உருவாக்கி கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர்.
ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் அவருக்கு ஃபேன், நாற்காலி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு விஐபிக்கு அளிக்கும் வசதிகள் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வசதிகளுக்காக சிறை துறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் இருந்து ரூ.2 கோடி லஞ்சமாக அளிக்கப்பட்டதாக வதந்திகள் பரவுகின்றன.
அறிக்கை
இதுகுறித்து சிறைத்துறை டிஐஜியான ரூபா, கர்நாடக டிஜிபி ஆர்.கே.தத்தாவுக்கு, சிறைத்துறை டிஜிபி ஹெச்.எஸ்.சத்யநாராயண ராவ் மற்றும் சிறை அதிகாரிகள் குறித்து குற்றம்சாட்டி அறிக்கை அளித்துள்ளார்.
நடவடிக்கை எடுங்கள்
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனால் சிறைத் துறைக்குதான் அவமானம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த டிஐஜி. சிறப்பு சலுகைகள் மூலம் சசிகலா சிறையின் விதிகளை மீறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் என்ன
தத்தாவுக்கு ரூபா அளித்த அறிக்கையில் சசிகலாவுக்கென்று தனி சமையலறை உருவாக்கப்பட்டுள்ளது. இது சிறை விதிகளை மீறியதாகும்.முத்திரைத்தாள் மோசடி குற்றவாளி அப்துல் கரீம் தெல்கியின் காலை பிடித்து விடுவதற்கு ஆள்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது அறையில் நடப்பது என்னென்ன என்பது உங்களுக்கு சிசிடிவி மூலம் தெரிந்திருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
சிறையில் கஞ்சா
சிறையில் உள்ள 25 கைதிகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தோம். அப்போது அவர்கள் கஞ்சா உள்கொள்வது தெரியவந்துள்ளது. அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் சம்பந்தப்பட்ட காவலர் இல்லை. இன்னும் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சிறையில் கஞ்சாவை தடை செய்ய எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.