என் மனைவிக்கு ஓட்டுப் போடாவிட்டால்....: முஸ்லீம் மக்களை மிரட்டிய உ.பி.பா.ஜ.க நிர்வாகி
உள்ளாட்சித் தேர்தலில் மனைவிக்கு ஓட்டுப்போடச்சொல்லி மிரட்டியுள்ளார் பா.ஜ.க நிர்வாகி.
லக்னோ : உ.பி.,யில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தனது மனைவிக்கு ஓட்டுப்போடும்படி பா.ஜ.க நிர்வாகி ஒருவர் முஸ்லீம் மக்களை மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
உத்திரபிரதேசத்தில் இந்த மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது அங்கு பா.ஜ.க.,வின் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவில் அங்கு பா.ஜ.க அறுதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அதனால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று தன்னுடைய செல்வாக்கை காட்ட தீவிர முனைப்பில் இருக்கிறது பா.ஜ.க
இந்நிலையில் பாராபங்கி மாவட்டத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய பா.ஜ.க நிர்வாகி ராஜ்னீத் குமார் ஸ்ரீவத்சவா, அங்கு போட்டியிடும் தனது மனைவியை ஆதரித்துப் பேசினார். அப்போது, இங்கு நடந்து கொண்டிருப்பது எங்கள் ஆட்சி. எங்களுக்குத் தான் நீங்கள் ஓட்டுப்போட்டாக வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு பிரச்னை தான். அப்போது உங்களைக் காப்பாற்ற சமாஜ்வாடி தலைவர்கள் இருக்கமாட்டார்கள். நாங்கள் தான் அங்கும் இருப்போம். அதனால் எங்களுக்கு ஓட்டுப்போட்டுவிடுங்கள் என்று முஸ்லீம் மக்களை வெளிப்படையாக மிரட்டி உள்ளார்.
அதே மேடையில் இருந்த அமைச்சர்களான தாரா சிங் சவுகான் மற்றும் ராம்பதி சாஸ்திரி ஆகியோர் அதைக் கண்டிக்காமல் அவரது பேச்சை ரசித்துக்கொண்டு இருந்தனர். மேலும், உங்களிடம் ஓட்டுப்பிச்சை கேட்கவில்லை. நீங்கள் எங்களுக்குத் தான் ஓட்டுப்போட வேண்டும் என்று நியாபகப்படுத்துகிறேன் என்றும் கூறி உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் தாரா சிங் சவுகான், அந்த மேடையில் முஸ்லீம் மக்களை மிரட்டும் விதமான ராஜ்னீத் சொன்னது போல எந்த வார்த்தையும் நான் கேட்கவில்லை. அவர் மக்களிடம் ஓட்டுப்போடும்படி மட்டும் தான் சொன்னதாகத் தெரிவித்து உள்ளார்.