ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் க்ளியர்.. நெருங்கிய போட்டி நிலவிய தொகுதிகளிலும் கிடுகிடு வித்தியாசம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான எண்ணிக்கை விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது 5 தொகுதிகளில் தேர்தல் யுத்தம் வெறும் 500 ஓட்டுகள் வித்தியாசத்தில் உச்சத்தில் உள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கூட்டணி நல்ல முன்னிலை பெற்றுவிட்டதால், ரிசல்ட் எந்த பக்கம் போனாலும் அது காங்கிரஸ் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்படி, ஜார்க்கண்டின் பிஷ்ராம்பூரில், சுயேச்சை வேட்பாளர் நரேஷ் பிரசாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின், ராம்சந்திர சந்திரவன்ஷியைவிட வெறும், 299 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். ஆனால் பிறகு ராம்சந்திரா 7 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று எங்கோ போய்விட்டார்.
கோமியா தொகுதியில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் (ஜே.எம்.எம்) பபிதா தேவி, ஏ.ஜே.எஸ்.யூ கட்சியின் லம்போடர் மஹ்தோவை 409 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். ஆனால் பிறகு ஏஜேஎஸ்யூ கட்சியின் லம்போடர் சுமார் 11 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று அசத்திவிட்டார்.
இருப்பினும், மிகவும் சுவாரஸ்யமான போட்டி ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக சார்பில் களமிறங்கிய தற்போதை முதல்வர் ரகுபர் தாஸ் 771 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் சர்யூ ராயைவிட பின் தங்கியிருந்தார். ஆனால், சர்யூ ராய் தொடர்ந்து அசத்தி, 9000 வோட்டுகளுக்கும் மேல் முன்னிலை வகிக்கிறார்.
மதுபூரில், பாஜக கட்சி வேட்பாளர், ராஜ் பலிவார் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹாஜி ஹுசைன் அன்சாரியைவிட 415 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். பிறகு அங்கு நிலைமை மாறியது. ஹாஜி ஹுசைன் அன்சாரி தற்போது சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.