அடடே.. இவ்வளவுதானா.. பாஜக தலைவர்கள் இதை எப்படி ஜீரணிக்க போகிறார்களோ தெரியலை!
ஜெய்ப்பூர்: தமிழகத்தில் அதிமுக-திமுக நடுவேயான வாக்கு வித்தியாசம் எவ்வளவு குறைவாக இருந்ததோ அதுபோன்ற நிலை, ராஜஸ்தானில், காங்கிரஸ்-பாஜக நடுவேயும் உள்ளது.
தமிழகச் சட்ட சபைக்கு 2016ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. 232 தொகுதிகளுக்கான முடிவுகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு 1 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகள் அதாவது 39.7 சதவிகிதம் வாக்குகள் கிடைத்தன.
அதிமுக அணிக்கு 1 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரத்து அறுபது வாக்குகள் அதாவது 40.8 சதவிகிதம் வாக்குகள் கிடைத்தன.
ஜஸ்ட் மிஸ்
அந்தத் தேர்தலில் அதிமுக அணிக்கும், திமுக அணிக்கும் உள்ள வாக்குகள் வித்தியாசம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள் தான். அதாவது 1.1 சதவீதம் வாக்குகள் தான் இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். மக்கள் நல கூட்டணி ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாவிட்டாலும், வாக்குகளை சிதறடித்ததுதான், திமுக கூட்டணி ஜஸ்ட் மிஸ் செய்ய முக்கிய காரணமாக அமைந்தது.
ராஜஸ்தான் நிலை
இப்போது இதே நிலைதான், இல்லை.. இல்லை.. இதைவிட குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில்தான், பாஜகவை ராஜஸ்தானில் வீழ்த்தியுள்ளது காங்கிரஸ் கட்சி. இன்று பிற்பகல் நிலவரப்படி, தேர்தல் ஆணைய வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ள டேட்டா அடிப்படையில் பார்த்தால், காங்கிரஸ் பெற்ற வாக்குகள், 94,31107. அதாவது 39.2 சதவீத வாக்குகள். பாஜக பெற்றுள்ளது, 92,71093. அதாவது 38.5 சதவீதம் வாக்குகள். அப்படியானால் 0.7 சதவீதம் அளவுக்குதான் இரு கட்சிகள் நடுவேயான வாக்கு வித்தியாசம் உள்ளது. ஆனால் சீட்டுகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. பாஜக 67 தொகுதிகளிலும், காங்கிரஸ் 107 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
சுயேச்சைகள்
சுயேச்சைகள் இங்கு கணிசமாக வாக்கு அறுவடை செய்துள்ளனர். பல இடங்களில் பாஜக, காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கிய சுயேச்சைகள் வாக்குகளை சிதறடித்து தேர்தல் களத்தை சஸ்பென்ஸ்சோடே வைத்திருந்தனர்.
வாக்கு வித்தியாசம்
ராஜஸ்தானில் சுயேச்சைகள், 22,53759 லட்சம் வாக்குகளை பெற்றனர். 9.4 சதவீதம் வாக்குகளை இவர்களே எடுத்துக்கொண்டுள்ளனர். எனவேதான் பிரதான இரு கட்சிகளுக்கும் நடுவேயான வாக்கு வித்தியாசம் என்பது மிகவும் குறைவாக உள்ளது.
கூட்டணி அவசியம்
பகுஜன் சமாஜ் கட்சி, 10,23327 லட்சம் வாக்குகளை ஈர்த்துள்ளது. அக்கட்சிக்கு 4.3 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணி வைத்து களமிறங்கியிருந்தால் தேர்தல் முடிவில் நல்ல ஆதாயம் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்தது தெளிவாகிறது. லோக்சபா தேர்தலுக்கு இவற்றையெல்லாம் காங்கிரஸ் கட்சி கருத்தில் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.