லோக்சபா தேர்தல்: மிசோரமில் 40% வாக்குகள் பதிவாகின!
அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஒரு லோக்சபா தொகுதி மற்றும் ஒரு சட்டசபை தொகுதியில் பிற்பகல் வரை 40% வாக்குகள் பதிவாகி உள்ளன.
லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. மிசோரமில் கடந்த 9-ந் தேதி வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் ப்ரூ அகதிகளுக்கு வாக்குரிமை அளித்ததை எதிர்த்து ஏப்ரல் 7ந் தேதி முதல் மிசோரம் மாநிலத்தில் 72 மணி நேர பந்த் அறிவிக்கப்பட்டதால் வாக்குப் பதிவு இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மிசோரம் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ், யு.டி.எப். மற்றும் ஆம் ஆத்மி ஆகிய பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே அங்கு எம்பி ஆக இருந்துவரும் ரூலா, ஆம் ஆத்மி சார்பில் மைக்கேல் லால் சூலா, மற்றும் ஐஐகு ராபர்ட் ரோமியா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இங்கு மொத்தம் 7,02,189 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 1,126 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்று வாக்காளர்கள் அறியும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் காலை முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. பகல் 2 மணி வரை மொத்தம் 40% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேலும் எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் வங்கதேசம் மற்றும் மியான்மர் எல்லைகளும் பிற மாநில எல்லைகளும் "சீல்" வைக்கப்பட்டுள்ளன.