வியாபம் ஊழல்: நேர்மையான விசாரணை போதும்- அரசின் பண உதவியை நிராகரித்த நிருபரின் குடும்பம்
போபால்: நேர்மையான விசாரணையைத் தவிர தங்களுக்கு வேறு எந்த உதவிகளும் தேவையில்லை என வியாபம் முறைகேடு குறித்து செய்தி சேகரித்த போது மர்ம மரணம் அடைந்த பத்திரிக்கையாளரின் குடும்பத்தார் மத்தியப்பிரதேச முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தும் மத்தியப் பிரதேச தொழில்கல்வி வாரியத்தில் (வியாபம்) கடந்த 2004ம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வியாபம் ஊழல் முறைகேடுகள் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய ஊழல் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த வியாபம் ஊழல் முறைகேட்டில் தொடர்புடைய கவர்னர் மகன் தொடங்கி மருத்துவமனை டீன், பத்திரிக்கையாளர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தி சேகரித்த பத்திரிக்கையாளர் அக்ஷய் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
அவரது வயிற்று பகுதி உடல் உறுப்புகள் குறித்த மருத்துவ பரிசோதனையை மத்திய பிரதேசத்திற்கு வெளியே நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த அக்ஷய் சிங்கின் குடும்பத்தாரை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது, அக்ஷய் சிங்கின் சகோதரிக்கு அரசு வேலை தருவதாகவும், மேலும், அவரது குடும்பத்தாருக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்ய மத்தியப் பிரதேச அரசு தயாராக இருப்பதாகவும் சிவராஜ் தெரிவித்தார்.
ஆனால், அதனை மறுத்துவிட்ட அக்ஷய் சிங்கின் குடும்பத்தார், அக்ஷயின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரோக்கியமாக இருந்த அக்ஷய் திடீரென இறந்தது எப்படி, அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்ற உண்மையையும் அரசு கண்டுபிடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.