நம்ரதா தோமரின் மரணம் கொலைதான்… பிரேத பரிசோதனை செய்த டாக்டர் திடுக் தகவல்
மும்பை: வியாபம் மூலம் சட்ட விரோதமாக மருத்துவ கல்லூரியில் இடம் பெற்று படித்து வந்த நம்ரதா தோமர் மாணவியின் மரணம் கொலைதான், தற்கொலையோ, இயற்கை மரணமோ அல்ல என்று மாணவியை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கூறியுள்ளனர்.
நர்மதாவின் மரணம் குறித்து மீண்டும் புலன் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தனியார் டிவிக்கு மருத்துவர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியம் (வியாபம்) நடத்தி வந்த நுழைவுத்தேர்வில் பெருமளவில் ஊழல் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தேர்வு வாரியத்தில் ஏராளமானோர் பணம் கொடுத்து வேலை பெறுவதாக புகார் எழுந்தது. இந்த ஊழலில் பல்வேறு அரசியல் தலைவர்கள், வியாபாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை உயர்நீதிமன்றம் அமைத்து உள்ளது.ஆனால் இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் என சுமார் 40க்கும் மேற்பட்டோர் கடந்த சில ஆண்டுகளில் மர்மமாக மரணமடைந்து வருகின்றனர். இது வியாபம் ஊழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஊழலில் தொடர்புடைய நம்ரதா தோமர் என்ற மாணவி கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் மர்மமான முறையில் இறந்தார். உஜ்ஜயினி ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்தார். அது தற்கொலை எனக் கூறி மத்தியபிரதேச போலீஸ் வழக்கை முடித்து வைத்தது. மாணவி மரணம் தொடர்பான வழக்கு 2014ம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனால் நம்ரதா தோமரின் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
வியாபம் வழக்கில் முதல் மரணம் என்பதால் சமீபத்தில் மாணவி நம்ரதா தோமரின் பெற்றோரிடம் பேட்டி காண்பதற்காக பிரபல செய்தி சேனல் ஒன்றின் செய்தியாளர் அக்ஷய் சிங் என்பவர் ஜபுவா மாவட்டத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அங்கு பேட்டி முடிந்த சில நிமிடங்களில் அவரது வாயில் நுரை தள்ளியது. உடனே மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது, வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இது மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவியின் மரணம் கொலைதான்
நம்ரதா தோமர் மரணம் தொடர்பாக 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி வழங்கப்பட்ட அறிக்கையில், "மாணவி வலுக்கட்டாயமாக மூச்சுத்திணற செய்யப்பட்டு உள்ளார், இது கொலையே" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. போலீசார் இதனை தற்கொலை என்று தெரிவித்து விட்டனர். ஆனால் மாணவியின் இறப்பு தொடர்பாக டாக்டர்கள் கொடுத்த, பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கை மீண்டும் தொடங்க கோரிக்கை எழுந்தது.
கொலைக்கான ஆதாரம் இல்லை
இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி மனோகர் வர்மா பேசுகையில், "அறிக்கையின் அடிப்படையில், மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணையை தொடங்கினோம் மற்றும் பிரேத பரிசோதனை நிபுணர்கள் உதவியுடன் குற்றகாட்சிகள் மீண்டும் உருவாக்கப்பட்டது. கொலை என்று கருதுவதற்கு எந்த ஒரு தகவலையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக புதிய ஆதாரம் கிடைத்தால், நாங்கள் மீண்டும் விசாரிக்க முடியும் ஆனால் இதுவரையில் இது கொலை என்று குறுப்பிட எந்தஒரு ஆவணமும் கிடைக்கவில்லை," என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிருபர் மரணம்
இந்நிலையில் நம்ரதா தோமர் தற்கொலை செய்துக் கொண்டார் என்ற தகவல் நிராகரிக்கப்பட்டதே, செய்தியாளர் அக்ஷய் சிங் இதுதொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் மீண்டும் பேட்டி எடுக்க காரணமாக இருந்தது பேட்டி எடுக்கப் போன செய்தியாளர் திடீரென மரணமடையவே, மாணவியின் மரணம் தொடர்பாக புதிய விசாரணை நடத்த எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
புயலை கிளப்பும் மருத்துவர்
மாணவி நம்ரதா தோமர், மரணம் அடைந்தபோது இரண்டாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி ஆவார். வியாபம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர் என்றும், அவர் மருத்துவ கல்லூரியில் சட்டவிரோதமாக இடம்பெற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் பி.பி. புரோகிட் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், மாணவி நம்ராதாவின் மரணம் கொலைதான். அது இயற்கையானதாக மரணமாக இருப்பதற்கு ஒரு சதவிகிதம் கூட சாத்தியமில்லை என்று கூறியுள்ளது மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளது.