வியாபம்: இறப்பதற்கு அனுமதி கோரி மருத்துவ மாணவர்கள் 5 பேர் ஜனாதிபதிக்கு கடிதம்
போபால்: வியாபம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர், இறப்பதற்கு அனுமதி கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் தொழிற்கல்வி தேர்வு வாரியத்தில் நடந்த மாபெரும் முறைகேடுகள் இந்தியாவையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளன. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வியாபம் முறைகேட்டில் தொடர்புடைய 49 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து மாநில சிறப்புக்குழு விசாரணை நடத்தியது. ஆனால், இந்த விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனைத் தொடர்ந்து , மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. அதனை ஏற்று, ‘வியாபம்' ஊழல் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி 40 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. குழு, கடந்த திங்கட்கிழமை விசாரணையை தொடங்கியது.
2010-ம் ஆண்டு நடந்த மருத்துவ நுழைவு தேர்வு சட்டவிரோதமாக நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, மத்திய பிரதேசம் காஜ்ரா ராஜா மெடிக்கல் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அம்மாணவர்கள், ‘தங்கள் மீதான குற்றச்சாட்டை நாங்கள் தெளிவு செய்துவிட்டோம், ஆனால் நாங்கள் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பேதம் பார்க்கப்படுகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ‘ நாங்கள் பி.எம்.டி. தேர்வை (2010-ம் ஆண்டு நடந்த மருத்துவ நுழைவு தேர்வு) முடித்துவிடோம், ஆனால் மூன்று வருடங்கள் கழித்து எங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து, கல்லூரி ஐ.டி. கார்டில் இருந்து வேறுபடுவதாக கூறி எங்களது மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் நடந்த மருத்துவ நுழைவு தேர்வு ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட 2,500 பேர்களில் இவர்களது பெயரும் இடம்பெற்றது. இம்மாணவர்கள் மீது தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 5 மாணவர்களும், அவர்களுடைய பெயரை தங்களது கைரேகையின் மூலம் தெளிவு செய்தனர். பின்னர் படிப்பதற்கு அனுமதி கோரி மத்திய பிரதேசம் மாநிலம் ஹைகோர்ட்டை நாடினர். ஹைகோர்ட்டும் அவர்களுக்கு அனுமதி வழங்கியது. பின்னர் குவாலியரை சேர்ந்த கல்லூரி அவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொண்டது. இருப்பினும் மாணவர்கள் மத்தியில் அவர்கள் பேதம் காட்டப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர் அமித் சாகதா கூறுகையில், "எல்லோரும் எங்களுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு உள்ளதாகவே பார்க்கின்றனர், அவர்கள் எங்களை மோசடி காரர்கள் என்றே அழைக்கிறது. எங்களுடைய விடைத்தாள்களும் தனியாக எடுக்கப்படுகிறது," என வேதனை தெரிவித்துள்ளார்.
இது தங்களுக்கு மிகவும் சித்ரவதையாக உள்ளதாகவும், எனவே தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் இல்லையென்றால் இறப்பதற்கு அனுமதி தரவேண்டும்' என அம்மாணவர்கள் குடியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு மாணவர்களிடம் இருந்து எந்தஒரு புகாரும் வரவில்லை என்று தெரிவித்து உள்ளது. எந்தஒரு மாணவர் மீதும் பேதம் காட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.