வியாபம் ஊழல்: சாட்சியாக இருந்த காவலர் மரணம்... பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு
மும்பை: 'வியாபம்' ஊழல் வழக்கில் சாட்சியாக இருந்த போலீஸ் காவலர் திடீர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், சாட்சிகள் என மர்மமான முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநில தொழில் முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத் தேர்வுகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்த ஊழலில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
இது ஊழல் வழக்கை தற்போது மாநில உயர்நீதி மன்ற மேற்பார்வையின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், சாட்சிகள் என அடுத்தடுத்து பலரும் மர்மமான முறையில் மரணம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் சாட்சியாக இருந்த போலீஸ் காவலர் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
போலீஸ் அகாடமியில் இருந்து மூன்று போலீசார் தப்பிக்க உதவியதாக கூறப்படும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சஞ்செய் குமார் யாதவ் என்ற போலீஸ் கான்ஸ்டபிள், கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்தது சிறப்பு விசாரணைக்குழு நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, 'வியாபம்' முறைகேடு குறித்த விசாரணையை கண்காணித்து வரும் நீதிபதி சந்தரேஷ் பூஷன், இந்த முறைகேட்டு வழக்கில் தொடர்புடையோர் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அசாதாரணமாக உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.
'வியாபம்' வழக்கில் 48 பேர் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்து போயுள்ளனர். தற்போது சாட்சி ஒருவரும் இறந்து போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் என மர்மமான முறையில் இறந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.