வியாபம் முறைகேடு; வெளிப்படுத்தியவர் மனைவி மீது “ஹவாலா” பண மோசடி வழக்கு!
இந்தூர்: வியாபம் முறைகேடு தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தியவரின் மனைவி மீது ஹவாலா பண மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் மேகனா பாண்டே என்பவர் தனது அலுவலகத்தில் இருந்து நேற்று வெளியே வரும்போது போலீசார் அவரைச் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது அவரது கைப்பையில் 9 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் இருந்ததாகவும், அந்த பணம் குறித்து அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓ.பி. திரிபாதி தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் மேகனா பாண்டே விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த மேகனா பாண்டே, பிரஷாந்த் பாண்டே என்பவரின் மனைவி ஆவார். பிரஷாந்த்தான் ம.பி. அரசின் வியாபம் முறைகேடுகளை முதலில் அம்பலப்படுத்தியவர் ஆவார். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரஷாந்த் பாண்டே வேண்டுமென்றே போலீசார் தங்களை சிக்க வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
போலீசார் பறிமுதல் செய்துள்ள பணம் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணம் என்றும், இது ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.