இந்தியாவில் நுழைய பல மில்லியன் டாலரை லஞ்சமாக கொட்டிக் கொடுத்த வால்மார்ட்.... ஷாக் ரிப்போர்ட்!
டெல்லி: இந்தியாவுக்குள் நுழைவதற்கு பல மில்லியன் டாலர்களை அரசு அதிகாரிகளுக்கு வால்மார்ட் நிறுவனம் லஞ்சமாக கொடுத்திருப்பது உறுதியாகி உள்ளது.
அமெரிக்காவின் சங்கிலித் தொடர் நிறுவனமான வால்மார்ட் 2007ஆம் ஆண்டு இந்தியாவில் பார்தி நிறுவனம் மூலம் நுழைந்தது. பின்னர் 2013ஆம் ஆண்டு முதல் தனித்து செயல்பட தொடங்கியது.
வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்கு வசதியாக சுங்கத்துறை கெடுபிடிகள் இல்லாமல் இருப்பதற்காகவும் சரக்குகளை இந்தியாவிற்குள் கொண்டு வர உதவுவதற்காகவும் அரசு அதிகாரிகளுக்கு பல மில்லியன் டாலர்களை லஞ்சமாக கொடுத்தாக முன்னர் தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் மத்திய அரசு அதிகாரிகளும், வால்மார்ட் அதிகாரிகளும் இந்த புகார்களை மறுத்துவந்த நிலையில் தற்போது உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மீண்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் வால் ஸ்டீர்ட் ஜேர்னல் பத்திரிகையில் வால்மார்ட் நிறுவனத்தின் லஞ்ச நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சுங்கத்துறை கெடுபிடிகள் இல்லாமல் சரக்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்காக பல அதிகாரிகளுக்கு வால்மார்ட் லஞ்சம் கொடுத்தது குறித்து அமெரிக்காவில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் ரூ300, ரூ13,000 ஆயிரம் என அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பல மில்லியன் டாலர் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வால்மார்ட் நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.