இந்தியாவில் விரியும் “வால்மார்ட்” கிளைகள் – பஞ்சாப்பிலும், ஆந்திராவிலும் விரைவில்!
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் பஞ்சாப்பில் வால்மார்ட்டின் புதிய மொத்த விற்பனை நிலையங்கள் விரைவில் திறக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், தற்போது இந்தியாவில் ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் புதிய மொத்த விற்பனை நிலையங்களை தொடங்கவுள்ளது.
இது குறித்து வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி க்ரிஷ் ஐயர் கூறுகையில் "சமீபத்தில் எங்களுக்கு இந்தியாவில் 2 மொத்த விற்பனை நிலையங்களை தொடங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இதையடுத்து, ஆந்திராவில் விசாகப்பட்டினத்திலும் மற்றும் பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலும் எங்கள் புதிய விற்பனை நிலையத்தை தொடங்க உள்ளோம். பஞ்சாப்பில் இது எங்களது இரண்டாவது விற்பனை நிலையம் ஆகும்" என்றார்.
புதிய விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஏற்கனவே இந்தியாவில் பணம் கொடுத்து பொருள் வாங்கி செல்லும் 20 விற்பனை நிலையங்களை கொண்டுள்ள வால்மார்ட் நிறுவனம், இந்த வருடத்திற்குள் தனது 21வது விற்பனை மையத்தை ஆக்ராவில் திறக்கும் என்றும் அடுத்த 5 வருடத்திற்குள் 50 விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் க்ரிஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.