வீட்டில் கழிப்பறை இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட முடியும்... பீகாரில் புதிய சட்டம்
பாட்னா: வீட்டில் கழிப்பறை இருந்தால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் போட்டியிட அனுமதி வழங்கப்படும் என்ற புதிய சட்டம் பீகாரில் அறிமுகப் படுத்த பட்டுள்ளது.
பீகார் மாநில சட்டசபையில் நேற்று பஞ்சாயத்து ராஜ் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
பீகார் மாநில உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் வீட்டில் கண்டிப்பாக கழிப்பறை கட்டி இருக்க வேண்டும். கழிப்பறை கட்டாதவர்கள் தேர்தலில் போட்டியிட இயலாது.
உள்ளாட்சி அமைப்பின் எல்லா பதவிகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும். கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டாலும் அவர் வீட்டில் கழிப்பறை இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒவ்வொருவரும் ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் கழிப்பறை கட்டி முடித்திருக்க வேண்டும். அதை வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் எழுத வேண்டும். இல்லையெனில் தேர்தலில் போட்டியிட இயலாது' என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சட்டசபையில் இந்த சட்டத்தை தாக்கல் செய்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் வினோத் பிரசாத் யாதவ் கூறுகையில், ‘கிராமங்களில் திறந்த வெளிகளை மக்கள் காலைக்கடனுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த சட்டத்திருத்தம் காரணமாக வீடுகள் தோறும் கழிப்பறை கட்டும் நிலை உண்டாகும்' என்றார்.
இருப்பினும் இதேபோன்ற ஒரு சட்டம் ஏற்கனவே குஜராத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.