என் மகளுக்கு நான் தீவிரவாதியாக தெரியக் கூடாது... ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி
டெல்லி: கூகுளில் என்னை சர்ச் செய்து பார்க்கும்போது என் மகளுக்கு நான் ஒரு கிரிக்கெட் வீரர் என்றுதான் தெரிய வேண்டும். தீவிரவாதியாக நான் தெரியக் கூடாது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.
கிரிக்கெட் சூதாட்டப் புகார்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டுள்ளார். மீண்டும் தனது புகழ் பெற்ற பவுலிங்கை தொடர விரும்புவதாக கூறியுள்ளார்.
மனம் விட்டுப் பேசியுள்ள அவர் விரிவான பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அந்தப் பேட்டியிலிருந்து...
தாவூத்துடன் சேர்த்து எனது படம்
எனது படத்தையும், தாவூத் இப்ராகிம் படத்தையும் சேர்த்து நான் பார்க்க நேரிட்டது. அதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். வேதனைப்பட்டேன்.
|
எனது மகள் என்னைத் தேடும்போது
எனது மகளுக்கு 3 மாத வயதாகிறது. நாளை வளர்ந்து கூகுளில் என்னைப் பற்றி தேடும்போது நான் ஒரு கிரிக்கெட் வீரராகத்தான் தெரிய வேண்டுமே தவிர தீவிரவாதியாக நான் அறியப்படக் கூடாது.
எனது தந்தைக்கு 2 முறை மாரடைப்பு
இந்த வழக்குக்குப் பிறகு எனது தந்தைக்கு 2 முறை மாரடைப்பு வந்து விட்டது. ஒரு முறை ஓபன் ஹார்ட் சர்ஜரியும் செய்துள்ளோம். குடும்பத்தினர் மொத்தமும் வேதனையில் மூழ்கியிருந்தனர். மகன் சிறைக்குப் போனதை எந்தப் பெற்றோரால்தான் தாங்கிக் கொள்ள முடியும்.
சண்டை போட விரும்பவில்லை
ஸ்ரீசாந்த் என்ற பெயர் வெளியில் தெரியக் காரணமே பிசிசிஐதான். அவர்களது முடிவுக்கு எதிராக நான் போராடப் போவதில்லை. அதேசமயம், உண்மை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
மீண்டும் விளையாட விரும்புகிறேன்
அதேபோல மீண்டும் அனுமதி கிடைத்தால் விளையாட விரும்புகிறேன். கிளப் போட்டிகளிலாவது விளையாட அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறேன். மீண்டும் என்னால் எனது அவுட்ஸ்விங்கர்களை வீச முடியும் என்று நம்புகிறேன்.
சச்சினுக்கு நன்றி
எனது போராட்ட காலத்தில் சச்சின் டெண்டுல்கர் எனது டிவிட்களை பாலோ செய்து வந்தார். இன்னும் அவர் என்னை பாலோ செய்கிறார். அது அவருக்கு சிறிய விஷயம்தான். ஆனால் எனக்கு மிகப் பெரிய சந்தோஷம் அது.
ஷேவாக்கும் ஆதரவு
அதேபோல வீரேந்திர ஷேவாக்கும் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். ஆதரவான, நம்பிக்கை தரும், ஊக்கம் தரும் வார்த்தைகளை கூறி வருகிறார்.
விளையாடப் பிறந்தவன்
நான் கிரிக்கெட் ஆடுவதற்காகவே பிறந்தவன். என்னால் கிரிக்கெட் ஆடாமல் இருக்க முடியாது. முதலில் நான் கிரிக்கெட் வீரர். பிசிசிஐ எனக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஸ்டேடியத்தை பயன்படுத்த அனுமதியுங்கள்
தேசிய ஸ்டேடியத்தை பயன்படுத்த ஒரு கிரிக்கெட் வீரருக்கு அனுமதி கிடைக்காவிட்டால் அதுதான் மோசமான அனுபவம். எனக்கு ஸ்டேடியத்தை பயன்படுத்த அனுமதி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். 14 வயது சிறுவன் கூட அந்த ஸ்டேடியத்திற்குப் போக முடிகிறது. ஆனால் என்னால் முடியவில்லை. என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
|
நிறைய நினைக்கிறேன்
கடந்த காலத்தில் நான் நிறைய அனுபவித்து விட்டேன். அது கடந்த காலம். அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை. நாளைய நாட்களை நேசிக்க விரும்புகிறேன். மீண்டும் விளையாட விரும்புகிறேன் என்றார் ஸ்ரீசாந்த்.