அடேங்கப்பா.. இடதுசாரி ஆதரவாளர்கள் கைது சர்ச்சையை வைத்து லோக்சபா தேர்தலுக்கு ஸ்கெட்ச் போடும் அமித்ஷா
டெல்லி: இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தி தரும் வகையில் பிரச்சார உக்தியை வகுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் ஷா தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக சமீபத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடதுசாரி செயல்பாட்டாளர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என்று அவர் குற்றம்சாட்டினார்.
ஆனால் இதையே, தேர்தலின்போது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர பிரச்சாரம்
பிரிவினைவாதிகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் துணைபோவதாக மக்கள் மத்தியில் பாஜகவினர் தீவிர பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டுள்ளாராம். வரும் லோக்சபா தேர்தலின் போது இந்த விவகாரம் முக்கிய விவாதப் பொருளாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் அவர்.
ஹீரோக்களாக்கும் முயற்சி
எனவே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவோருக்கு பாராட்டு பத்திரம் வழங்கும் நடவடிக்கையை அமித்ஷா மேற்கொண்டுள்ளார். மகாராஷ்ட்ரா போலீஸார்தான் சமீபத்தில் சமூக செயல்பாட்டாளர்களை அடுத்தடுத்து கைது செய்திருந்தனர். இதற்காக அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு அமித்ஷா பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற நக்சல்களாம்
கைது செய்யப்பட்டவர்களுக்கு, அர்பன் நக்சல் (Urban Naxal) என்று பெயர் சூட்டி, இவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள், இவர்களுக்கு எதிர் கட்சிகள் ஆதரவு தருகின்றன, இவர்களை ஒடுக்குவது பாஜக அரசு மட்டுமே என்று பிரச்சாரம் நடத்துமாறு அமித்ஷா உத்தரவிட்டுள்ளாராம்.
பாதுகாப்பு
நாட்டின் பாதுகாப்பில் கூட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சமரசம் செய்து கொள்வதைப் பாருங்கள் என்று எதிர் தாக்குதல் நடத்தி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார் அமித்ஷா. இதன் மூலமாக பெட்ரோல் விலையேற்றம், ரூபாய் மதிப்பு சரிவு, பண மதிப்பிழப்பினால் மக்கள் படும் அவஸ்தை, அத்தியாவசிய பொருள் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருந்து மக்களை திசை திருப்ப முடியும் என்று அமித்ஷா நம்புகிறார்.