32 ஆண்டு சேவைக்குப் பின் நாளை ரிடையர் ஆகும் ஐஎன்எஸ் கோதாவரி போர் கப்பல்
மும்பை: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர் கப்பலான ஐஎன்எஸ் கோதாவரி 32 ஆண்டு சேவைக்கு பிறகு நாளை ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறது.
1960-70களில் லியாண்டர் ஃப்ரிகேட் திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் ஐஎன்எஸ் கோதாவரி. மும்பையில் கட்டப்பட்ட கப்பலான கோதாவரி 1980ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 1983ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.
இந்தியாவின் ராணுவ பலத்தின் அடையாளமாக ஐஎன்எஸ் கோதாவரி உலகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது. கோதாவரி 32 ஆண்டுகளாக ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோதாவரி கப்பலுக்கு நாளையுடன் ராணுவத்தில் இருந்து ஓய்வு அளிக்கப்படுகிறது.
கடந்த 32 ஆண்டுகளில் ஐஎன்எஸ் கோதாவரி ஆபரேஷன் ஜுபிடர், ஆபரேஷன் ஷீல்ட், ஆபரேஷன் போல்ஸ்டர் உள்ளிட்ட பல ராணுவ ஆபரேஷன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு ஆபரேஷன் கேக்டஸில் பயன்படுத்தப்பட்ட கோதாவரியின் உதவியால் மாலத்தீவு அரசை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது. கிளாஸ் ஃப்ரிகேட் கப்பல்களில் முதன்மையானது ஐஎன்எஸ் கோதாவரி. அதன் பிறகு கங்கா, கோமதி ஆகிய கப்பல்கள் கட்டப்பட்டன.
ஐஎன்எஸ் கோதாவரிக்கு ஓய்வு அளிக்கப்படுவது வருத்தம் அளிப்பதாக அந்த கப்பலில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.