பாகிஸ்தானுடன் இணைந்து ரஷ்யாவை எதிர்க்க இந்திரா காந்தி போட்ட திட்டம்.. சி.ஐ.ஏ பரபரப்பு தகவல்
டெல்லி: ரஷ்யாவை பாகிஸ்தானுடன் இணைந்து சமாளிக்க இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காய் நகர்த்தியதாக அமெரிக்க விசாரணை ஏஜென்சியான, சி.ஐ.ஏ தற்போது ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த விவரம்: சோவியத் ரஷ்யா மிகப்பெரிய வல்லரசாக இருந்த நேரம் அது. அப்போது ஆப்கானிஸ்தானுக்குள் சோவியத் ரஷ்யா, ஊடுருவ ஆரம்பித்தது. இது இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஆப்கனின் அண்டை நாடான, பாகிஸ்தானை பகடைக்காயாக்கி இந்தியாவிலும் ரஷ்யா வேலையை காட்டுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. 1980ல், அப்போதைய பாக். பிரதமர் ஜியா உல் ஹக்கிடம் ஒரு உடன்படிக்கைக்கு ரெடியானார் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி.
அதாவது ரஷ்யாவை எதிர்க்க இந்தியாவும்-பாகிஸ்தானும் இணைந்து செயல்படலாம் என்பதுதான் அந்த திட்டம். ஆனால், அதை ஜியா உல் ஹக் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக அமெரிக்காவிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு ஆயுதங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது.
அமெரிக்காவின் ஆதரவுடன் ரஷ்யாவை எதிர்க்கலாம் என்பது பாகிஸ்தான் திட்டம். ஆனால் இந்திய பெருங்கடலில் வல்லரசு நாடுகள் போட்டி போடுவதை இந்தியா விரும்பவில்லை. தனது ஏகாதிபத்தியத்தை பறி கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும் அமைதி ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட இந்தியா எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. இவ்வாறு அந்த தகவல் தெரிவிக்கிறது.