கருப்புப் பணம்... 2 மாதத்திற்குள் கணக்கை முடிக்க இந்தியர்களுக்கு சுவிஸ் வங்கி திடீர் நெருக்கடி
மும்பை: கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்களது கணக்கை முடித்துக் கொள்ளுமாறு இந்திய வாடிக்கையாளர்களுக்கு சுவிஸ் வங்கி திடீர் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பட்டவர்கள் வரி ஏய்ப்பு செய்த தங்களது பணத்தை சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கில் குவித்து வைத்துள்ளனர்.
இவர்களின் பெயர் விவரத்தை காங்கிரஸ் அரசும் வெளியிட மறுத்துவிட்டது, இப்போதைய நரேந்திர மோடி அரசும் தயக்கம் காட்டி வருகிறது.
சுவிஸ் வங்கி...
இந்நிலையில், கருப்புப் பண விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க சுவிஸ் வங்கிகளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருக்கடி...
எனவே, சுவிஸ் வங்கியில் பெருமளவுக்கு கணக்கில் காட்டாத கறுப்பு பணத்தை குவித்துள்ள 4 வாடிக்கையாளர்களுக்கு அது நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளதாம்.
இந்தியர்கள்...
இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த வங்கிகளில் ரகசிய கணக்குகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த 4 பேரில் 3 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் டெல்லியை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதாரம்...
வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் இவர்கள் தங்களது கறுப்பு பணத்தை வங்கியில் இருந்து திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது டெபாசிட் செய்துள்ள பணத்திற்கு முறையான வரி கட்டிய ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என வங்கி தரப்பில் வலியுறுத்தப் பட்டுள்ளதாம்.
நச்சரிப்பு...
இது தொடர்பாக சுவிஸ் வங்கிகளின் பொதுமக்கள் தொடர்பு மேலாளர்கள், அந்த வாடிக்கையாளர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து நச்சரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட கருப்புப் பணம் வைத்திருப்பாேரை காப்பாற்ற நடக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது.