கறுப்பு பணம்.. ஜேட்லியுடன் மோதும் ஜெத்மலானி.. கேள்விகளை பத்திரிகை விளம்பரமாக வெளியிட்டார்!
டெல்லி: ஆங்கில ஊடகம் ஒன்று தமது கட்டுரையை வெளியிட மறுத்த நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் கறுப்புப் பணம் தொடர்பாக மத்திய அரசுக்கு குறிப்பாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு கேள்விகள் எழுப்பி விளம்பரம் ஒன்றை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம்ஜேத்மலானி.
மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி கடந்த ஞாயிறன்று தமது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் கறுப்புப் பண விவகாரத்தில் பாரதிய ஜனதா அரசு மீது கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மீது பாய்ந்திருந்தார். தம்முடைய 12 கேள்விகளுக்கும் ஜேட்லி பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் அருண் ஜேட்லி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் என்.டி.டி.வி. ஊடகங்கள் கூட்டாக செயல்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் 5-ம் பக்கத்தில் அரை பக்க விளம்பரம் ஒன்றை ஜெத்மலானி கொடுத்திருந்தார். அதிலும் தமது ட்விட்டர் பக்கங்களில் எழுப்பிய கேள்விகளையே அவர் முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜேத்மலானி, கறுப்புப் பணம் தொடர்பான என்னுடைய கட்டுரையை ஒரு ஊடகம் வெளியிட மறுத்தது. இதனால்தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் அந்த கட்டுரையையே விளம்பரமாகவே கொடுக்க நேரிட்டது. ஊடகங்களில் தொடர்ச்சியாக எழுதுகிற எனக்கு இது போன்ற நிலைமை ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
இப்படி என்னுடைய கட்டுரையை வெளியிடாமல் தடுத்ததில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலையீடு இருக்கலாம் என சந்தேகிக்கிறேன் என்றார்.
ஜேத்மலானி கொடுத்த விளம்பர அளவுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிகாரப்பூர்வ கட்டணம் ரூ94 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.