டிமானடைசேஷன் முடிவு அமித்ஷா மகனுக்கு முன்கூட்டியே தெரியுமா? காங். கிடுக்கிப்பிடி
மும்பை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜெய்ஷா நடத்திய நிறுவனம், யதார்த்தத்திற்கு மாறாக, பல கோடி ரூபாய் அதிப்படியாக சம்பாதித்துள்ளதாக 'திவயர்' இணையதளம் வெளியிட்ட செய்தி அடிப்படையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பிரித்விராஜ் சவான் அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஜெய்ஷாவுக்கு, பண மதிப்பிழப்பு குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்று சந்தேகம் எழுப்பினார். ஜெய்ஷா வர்த்தகம் பெருகியதன் பின்னணி குறித்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும், அமித்ஷாவும் பதில் அளிக்க அவர் கோரிக்கைவிடுத்தார்.
மும்பையில் இதுகுறித்து பிரித்விராஜ் சவான் மேலும் கூறியதாவது:
அமித்ஷா மகனுக்கு தெரியும்
டிமானடைசேஷன் முடிவு அறிவிக்கப்படுவது குறித்து ஜெய்ஷாவுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். டிமானடைசேஷன் வெளியாகும் முன்பு திடீரென தனது நிறுவனத்தை அவர் மூடியுள்ளார். 2014ம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகுதான், ஜெய்ஷா நிறுவனம் அபார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதுகுறித்து அமித்ஷாவும், அருண் ஜேட்லியும் விளக்கம் அளிக்க வேண்டும்.
மின்சாரத்துறை அமைச்சர் பதில் தேவை
ஜெய்ஷா நடத்தி வந்த நிறுவனம், மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயயங்கும், அமைப்பிடமிருந்து ரூ.10.36 கோடியை கடனாக பெற்றுள்ளது. ஆனால், இதற்கு பிணையாக கொடுக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்போ ரூ.6 கோடிதான். ஜெய்ஷா நிறுவனம் அதற்கு முன்பாக, காற்றாலை அல்லது, மரபு சாரா எரிசக்தி துறையில் அனுபவம் இல்லாத நிறுவனம். ஆனாலும், குறைந்த பிணை மதிப்புக்கு, அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளிக்க வேண்டும்.
பாஜகவின் ஓர வஞ்சனை
அமித்ஷா மகன் ஜெய்ஷாவுக்கு குசும் பின்செர்வ் என்ற நிறுவனத்தில் 60 சதவீத பங்குகள் உள்ளன. இந்த நிறுவனம், பங்குச் சந்தை வணிகம் செய்து வந்த நிலையில், தொடர்பே இல்லாமல் திடீரென, மத்தியய பிரதேசத்தில் காற்றாலையை வாங்கியுள்ளது. இதெல்லாம் பாஜகவின் சார்புத்தன்மை கொண்ட முதலாளித்துவ கொள்கை என்பதன் உதாரணமாகும்.
வழக்கு போட்டு தப்ப முடியாது
ஜெய்ஷா நிறுவனம் மீது எழும் பல்வேறு சந்தேகங்களை அவதூறு வழக்கு போட்டு மூடிவிட முடியாது. தனது பதவியை தப்பாக பயன்படுத்தினாரா என்பது பற்றி அமித்ஷாவே விளக்கம் அளிக்க வேண்டும். இந்த டீலிங்குகள் குறித்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு பிரித்விராஜ் சவான் தெரிவித்தார். அதேநேரம், மகாராஷ்டிர மாநில அமைச்சர்கள் கூட்டாக அளித்த பேட்டியில், பாஜக பெற்றுவரும் தொடர் வெற்றியால், காங்கிரஸ் இவ்வாறு அவதூறுகளை பரப்புவதாக குற்றம்சாட்டினர்.