அமேதியில் ராகுல் வீழ்ந்தாரா.. வீழ்த்தப்பட்டாரா ?
அமேதி: ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியடைந்துள்ளார் இது இந்திய அரசியலில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அமேதி தொகுதியும், நேரு குடும்பமும் பிரிக்க முடியாத நிலையில் இருந்த சூழலில் பாஜக வேட்பாளரிடம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தோல்வியடைந்துள்ளார். இந்த தொகுதியில் ராகுல் வீழ்ந்தாரா அல்லது வீழ்த்தப்பட்டாரா என்ற கேள்வி இப்போது எழுகிறது.
கடந்த முப்பது வருடங்களாக அமேதி, காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதியாக இருந்து வந்தது. இடையில் 1998 மக்களவை தேர்தலில் மட்டும் காங்கிரஸின் வேட்பாளரான கேப்டன் சதீஷ் சர்மா, பாஜகவின் சஞ்சய்சிங்கிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். பின்னர் இந்த தொகுதியில் சோனியா காந்தி 1999-க்கு பின் போட்டியிடத் துவங்கினார். இதனால் மீண்டும் அமேதியில் காங்கிரஸ் வலுப்பெற்றது. 2004 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ராகுல் முடிவு செய்தார். இவருக்காக அமேதி தொகுதியை விட்டுக் கொடுத்த சோனியா ரேபரேலியில் போட்டியிட்டார்.
2004 ம் ஆண்டு அமேதியில் ராகுல் போட்டியிட்டபோது அவருக்கு கிடைத்த வாக்கு சதவீதம் 71%. பின்னர் இந்த வாக்கு சதவீதம் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் மேலும் குறைந்தது. 2009-ல்அமேதியில் போட்டியிட்ட ராகுல் 66% வாக்குகளையே பெற்றார். அதுவே பின்னர் 2014-ல் 46% என்றானது. ஆனால் இதே வேளையில் பாஜக வளரத் தொடங்கியிருந்தது. 2014 தேர்தலில் ராகுலை எதிர்த்து ஸ்மிரிதி இரானி போட்டியிட்டார். அப்போது பாஜகவிற்கு37 % வாக்குகள் கிடைத்தன. அதற்கு முன்புவரை ஓரிலக்கத்தில் இருந்த பாஜக வாக்கு சதவீதம் இந்த தேர்தலில்தான் 37% என்றானது.
இது பாஜகவுக்கு பெரும் உற்ச்சாகத்தை கொடுத்தது. இதன் பின்னர் பாஜக இந்த தொகுதியின் மீது தனது சிறப்பு கவனத்தை செலுத்த ஆரம்பித்தது. இந்த தொகுதியில் ராகுலை வீழ்த்த ஸ்மிரிதிக்கு சிறப்பு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அந்த அசைன்மென்ட்டை வெற்றிகரமாக செய்து முடிக்க அவருக்கு அட்வான்சாக மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
அதாவது வழங்கப்பட்ட மத்திய அமைச்சர் பதவியின் மூலம் ராகுலை அமேதியில் வீழ்த்தி அவரது தலைமைத்துவத்தின் அடையாளத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. இத ஏற்றுக் கொண்ட ஸ்மிரிதியும் அமேதியில் தான் தோற்ற நாள் முதல் பம்பரமாக வேலை செய்ய ஆரம்பித்தார். மாதத்தில் பெரும்பாலான நாட்களை அமேதி தொகுதியில் கழித்த ஸ்மிரிதி, ராகுலை வீழ்த்துவதற்கான யுக்திகளை செயல்படுத்த ஆம்பித்தார்.
அமேதி தொகுதியில் ராகுல் ஜெகதீஸ்பூர் என்ற ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். ஆனால் அந்த கிராமத்திற்கு ராகுல் அடிக்கடி வருவதில்லை என்ற குற்றசாட்டு அப்பகுதி மக்களிடையே நிலவி வந்தது. இதை தனக்கு சாதகமாக்கிய ஸ்மிரிதி, தொடர்ந்து அந்த கிராமத்திலும் தனது படையை களமிறக்கினார். அங்கும் பாஜகவின் செல்வாக்கையும் தனது செல்வாக்கையும் மேம்படுத்த பல்வேறு யுக்திகளை கையாண்டார். அமித்ஷாவின் உத்தரவுக்கு இணங்க ஸ்மிரிதி பெரும்பாலும் அந்த தொகுதியிலேயே வலம்வந்தார். கிராமம், கிராமமாக, வீதி வீதியாக சென்றார்.
இந்த நிலையில் அமேதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் அமேதியின் ஐந்து தொகுதிகளில் பாஜகவிற்கு 4 தொகுதிகள் கிடைத்தன. மீதமுள்ள ஒரு தொகுதியை சமாஜ்வாதி கைப்பற்றியது. இதனால் காங்கிரஸ் அமேதியில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளையும் இழந்து நின்றது. இதற்கு அடுத்த கட்டமாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அமேதிக்கு அடிக்கடி வந்து கூட்டங்கள் நடத்தினர்.
2019-ல் தேர்தலை சந்திப்பதற்கான யுக்திகளை அப்போதே வகுக்க தொடங்கிவிட்டனர். அந்த தொகுதியின் வேட்பாளர் மீண்டும் ஸ்ம்ரிதி இரானி என்பதுவும் 2014- லியே முடிவு செய்யப்பட்டு இருந்ததால் தேர்தல் பணிகள் அப்போதே தீவிரம் அடைந்தது. அதோடு ராகுலுக்கு புதிய தலைவலியாக முஸ்லிம் வாக்குகள் குறையும் நிலையும் இந்த தேர்தலின்போது ஏற்பட்டது. மக்களவை தேர்தலில் இங்கு போட்டியிட்ட ராஜீவ் காந்திக்கு 1991-லும், சோனியாவிற்கு 1999-லும் ஹாஜி சுல்தான் என்பவர் உறுதுணையாக இருந்தார். அவரே ராஜீவ் மற்றும் சோனியா ஆகியோருக்கு தேர்தலின்போது முன்மொழிந்தார். . இதனால், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே அவரது குடும்பத்திற்கு நல்ல செல்வாக்கு இருந்தது.
இதற்கு பிரதி உபகாரமாக அவரது குடும்பத்திற்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தி அவரது மகன் ஹாரூண் ரஷீத்துக்கு இருந்தது. இதனால் அவர் அமேதியில் ராகுலை எதிர்த்துசுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இது ராகுலுக்கு மேலும், மேலும் அமேதியில் சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்மிரிதி இரானி தனது பிரச்சாரத்தை வேகப்படுத்தினார். “தான் தத்தெடுத்த ஒரு கிராமத்தையே பார்க்க வராத ராகுல், இந்தத் தொகுதியை எப்படிப் பார்ப்பார், இந்த நாட்டை எப்படிப் பார்த்துக் கொள்வார்” என்று அமேதியில் ஸ்மிருதி இரானி கேட்ட கேள்விகள் 39% கல்வியறிவு கொண்ட அமேதி தொகுதி மக்களை நன்றாக யோசிக்க வைத்தன. உங்களோடு ஐந்து வருட காலம் இருந்த எனக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா? அல்லது கடந்த 5 வருடங்களாக இந்த தொகுதிப் பக்கம் வராத ராகுலுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா என்று இரானி கேட்ட கேள்விகள் அமேதி வாக்காளர்களிடம் எடுபட்டன.
இது ஒருபுறம் என்றால் ஒவ்வொரு தேர்தல் தோறும் ராகுலுக்கு குறைந்து வந்த வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று தேர்தலுக்கு முன்பே ராகுலுக்குத் தகவல்கள் சென்றன. அப்போதுகூட அவர் அமேதியை நோக்கித் திரும்பாமல் தென்னிந்தியா மீது அன்பு செலுத்துகிறேன் என்று சொல்லி கேரளாவின் வயநாட்டை தேர்வு செய்து அதில் கவனம் செலுத்த தொடங்கினார். இவையெல்லாம் ராகுலின் வீழ்சசிக்கு காரணங்களாக அமைந்தன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினரோ பாஜக, ராகுலை வீழ்த்த ஐந்தாண்டுகள் திட்டமிட்டு தீவிர வேலைசெய்தது.
காங்கிரஸ் தலைவரான ராகுல் தனது பல பணிச் சுமைகளுக்கு இடையிலும் அமேதி மீது கவனம் செலுத்தியே வந்தார். அதோடு அவரது பிரதிநிதிகள் அமேதியில் செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அரசு இயந்திரம் மூலம் அமேதி தொகுதிக்கான மேம்பாட்டுப் பணிகள் எதையும் செய்ய விடாமல் மத்திய அரசும், உபி. பாஜக அரசும் சதி செய்தன. இதை அவர் அமேதி மக்களுக்குக் கடிதமாகவும் எழுதியிருந்தார். ஆனால் மக்கள் பொய்ப் பிரச்சாரத்தை நம்பிவிட்டார்கள்” என்று இப்ப்போது கூறுகிறார்கள் காதர் சட்டையினர். இருந்தாலும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம். இனியாவது ராகுலும் காங்கிரசும் விழித்துக் கொண்டால் நல்லது.