டோணியை விமர்சனம் செய்வோர் எல்லாம் தாவூத்தின் சிஷ்யர்கள்: சு.சுவாமி கடும் காட்டம்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியை விமர்சனம் செய்யும் டிவி சேனல் விமர்சகர்கள், தாவூத் இப்ராஹிமின் சிஷ்யர்கள் என்று பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சுப்பிரமணியன்சுவாமி காட்டமாக கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து டோணியை கழற்றிவிட்டு, கோஹ்லியின் ஆதிக்கத்தை நிலைநாட்ட சில உள்குத்து வேலைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
பிசிசிஐ தலைவராக பதவியை தொடர முடியாத நிலையில் ஐசிசி சேர்மன் சீனிவாசன் சிக்கியுள்ளதால், அவருக்கு நெருக்கமானவராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாகவும் விளங்கிய டோணி பழிவாங்கப்படுவதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.
Watch how Dawood's chelas on TV are targeting Dhoni. After failing to do anything to Srini, now they are after Dhoni.
— Subramanian Swamy (@Swamy39) October 14, 2015
இந்நிலையில், சுப்பிரமணியன்சுவாமி இன்று வெளியிட்ட டிவிட் ஒன்றில், "டிவி சேனல்கள் வழியாக, தாவூத் இப்ராஹிமின் சிஷ்யர்கள், டோணியை எப்படி குறிவைக்கிறார்கள் பாருங்கள். ஸ்ரீநிக்கு (சீனிவாசன்) எதிராக எதையும் செய்ய முடியாமல் தோல்வியடைந்ததால், தற்போது டோணியை குறிவைக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை கட்டுப்படுத்த நிழலுலக தாதா தாவூத் தொடர்ந்து முயலுவதாகவும், ஸ்ரீநிவாசன், டோணி போன்றோர் அதற்கு எதிராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.