அரசு மருத்துவமனை ஐசியூவில் பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடிய டாக்டர்கள், நர்ஸ்கள்... ஷாக்கான நோயாளிகள்!
அகமதாபாத்: குஜராத் மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் அவசர கால சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் முன்னிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நிதின்பாய் படேல், புதிய டயாலிசிஸ் சென்டரைத் திறந்து வைத்தார்.
அமைச்சர் சென்ற சில மணி நேரத்தில் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே நடனம் ஆடியுள்ளனர். அதுவும் அவசர கால சிகிச்சைப் பிரிவில்.
இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளப்பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
நோயாளிகள் முன்னிலையில்...
பாவப்பட்ட நிலையில் உடலிலும், மனதிலும் வேதனை மிகுந்து நோயாளிகள் படுக்கையில் படுத்திருக்க, அவர்களைச் சுற்றிலும் சுவர்களில் வண்ண வண்ண பலூன்கள் கட்டி, மருத்துவர்களும், செவிலியர்களும் மகிழ்ச்சியோடு டான்ஸ் ஆடும் காட்சிகள் பார்ப்பதற்கே உறுத்தலாக இருக்கிறது.
ஐசியூவில்...
பொதுவாக அவசர சிகிச்சைப் பிரிவில் செல்போன் பயன்படுத்தவே தடை உள்ளது. காரணம் அதனால் நோயாளிகளின் உடல்நிலை பாதிக்கப்படக் கூடாது என்பது தான். ஆனால், அவற்றை எல்லாம் மீறி அவசரகால சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களும், செவிலியர்களும் நடனம் ஆடியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நோயாளிகள் அதிர்ச்சி...
செருப்பு கால்களுடன், சிரித்தபடி மருத்துவர்களும், செவிலியர்களும் பாடல்களை பாடி, நடனமாடியதைக் கண்டு அங்கிருந்த நோயாளிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நோட்டீஸ்...
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ கண்காணிப்பாளர் பாவ்சர், ‘நவராத்திரி விழாவின் போது ஆடல், பாடலுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும், இந்த செய்தி கேட்டவுடன் உடனே ஆடல் பாடலை தடுத்து நிறுத்தியதாகவும், இதில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும்' தெரிவித்துள்ளார்.