காவிரி டென்ஷன் ஓவர்.. 11 வருடங்களுக்கு பிறகு சாதனை அளவை எட்டியது கே.ஆர்.எஸ் அணை
Recommended Video
பெங்களூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன 11 வருடங்களுக்குப் பிறகு கேஆர்எஸ் அணைக்கட்டு 112 அடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.
கேரளா, மற்றும் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலை, ஆகிய காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடகாவிலுள்ள, காவிரி அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஹாரங்கி, கபினி, ஹேமாவதி, கேஆர்எஸ் போன்ற அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கேஆர்எஸ் அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 112.60 அடியாக உயர்ந்துள்ளது.
மழை காரணமாக ஏற்கனவே உபரிநீரை திறந்து விடும் நிலையில் ஜூலை மாதத்திற்கான பங்கு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடுமாறு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
கேஆர்எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 3571 கன அடி தண்ணீரும், ஹாரங்கியிலிருந்து 13 ஆயிரத்து 856 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 36 ஆயிரத்து 875 கன அடி தண்ணீரும், ஹேமாவதியிலிருந்து 2350 கனஅடி தண்ணீரும் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.
இதனிடையே பெங்களூரு, மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் மழை காரணமாக பெங்களூர், மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர்.