எனது பங்களாவில் செடிகளுக்கு சிறுநீரை தான் ஊற்றுகிறேன்- ..கட்கரி சொன்ன ரகசியம்!
நாக்பூர்: தனது டெல்லி பங்களாவில் இருக்கும் செடிகளுக்கு தனது சிறுநீரை ஊற்றுவதால் தான் அவை வேகமாக வளர்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் நீர்பாசன முறைகள் பற்றி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்,
ஒரு 50 லிட்டர் கேனை எடுத்து அதில் என் சிறுநீரை சேமித்தேன். அதை என் தோட்டக்காரிடம் அளித்து சில செடிகளுக்கு ஊற்றுமாறு கூறினேன். என்ன அதிசயம், சிறுநீர் ஊற்றப்பட்ட செடிகள் பிற செடிகளை விட ஒன்றரை மடங்கு வேகமாக வளர்ந்துவிட்டன.
தினமும் சிறிய பிளாஸ்டிக் கேனில் சிறுநீரை பிடித்து அதை 50 லிட்டர் கேனில் சேகரித்தேன். இது வீட்டிலேயே இலவசமாக கிடைக்கும் உரம் ஆகும். நான் வெறும் சிறுநீர் பற்றி மட்டுமே தெரிவித்துள்ளேன். இதை தாண்டி கூற விரும்பவில்லை.
பொதுமக்களும் 50 லிட்டர் கேனில் தங்களின் சிறுநீரை சேமித்து செடிகளுக்கு ஊற்றலாம். சிறுநீரில் யூரியா மற்றும் நைட்ரஜன் ஆகியவை உள்ளன. டெல்லியில் உள்ள எனது பங்களாவில் சுமார் 1 ஏக்கர் நிலத்தில் ஏராளமான மரங்களும், செடிகளும் உள்ளன.
ஆரஞ்சு மரத்திற்கு தண்ணீருக்கு பதிலாக சிறுநீரை ஊற்றிப் பாருங்கள். அதன் பிறகு அந்த மரத்தில் அதிக மலர்கள் பூக்கும், கனிகள் காய்க்கும். அதன் வளர்ச்சியை நீங்கள் எளிதில் உணரலாம் என்றார்.