தண்ணீர் பஞ்சத்தின் கோரமான மறுபக்கம்... டெல்லியை ஆட்டிப்படைக்கும் டேங்கர் மாபியா!
டெல்லி: ஒவ்வொரு கோடை காலமும் டெல்லி மக்களுக்கு சோதனைக் காலம்தான். தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும். இதை வைத்து அங்கு மாபியா கும்பல்களும் தலைவிரித்தாடி வருகின்றன.
இவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா.. சட்டவிரோதமாக எங்காவது தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து குடிநீர் கோரி தங்களை அணுகும் மக்களிடம் அதிக விலைக்கு தண்ணீரை விற்பார்கள்.
பொதுமக்களுக்கும் இவர்களை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை. இதனால் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்து விட்டு தண்ணீரை வாங்கும் நிலையில் அவர்கள் உள்ளனர்.
2000 டேங்கர்கள்....
இப்படிப்பட்ட சட்டவிரோதமான, கிட்டத்தட்ட 2000 டேங்கர்கள் தலைநகரில் உலவிக் கொண்டிருக்கின்றனவாம். இவர்களுக்கு நல்ல வருமானமும் கொட்டுகிறதாம். மக்கள்தான் கண்ணீருடன் தண்ணீரை வாங்கி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.
நம்பிக்கை நாயகர்கள்...
சாதாரண குடிசைவாழ் மக்கள் முதல் பெரும் பெரும் பணக்காரர்கள் வரை தண்ணீர்ப் பஞ்சத்திற்கு இலக்காகின்றனர். இவர்களுக்கு இந்த டேங்கர் மாபியாக்கள்தான் நம்பிக்கை நாயகர்களாக விளங்குகின்றனர்.
தினசரி 2 மணி நேரம் மட்டுமே...
டெல்லியில் ஒரு நாள் குடிநீர்ப் பற்றாக்குறையானது 160 மில்லியன் காலன் நீராக உள்ளது. பல பகுதிகளில் மக்கள் தினசரி 2 மணி நேரம் வரை மட்டும் குழாய்கள் மூலம் வரும் தண்ணீரைப் பிடிக்க முடிகிறது. அதன் பின்னர் தண்ணீர் வருவதில்லை.
சோகத்தில் மக்கள்...
பல பகுதிகளில் சுத்தமாக குடிநீர் விநியோகமே கிடையாதாம். இவர்களின் நிலைதான் சோகமானது. தண்ணீருக்காக அலையும் நிலையில் இவர்கள் உள்ளனர்.
அரசே காரணம்...
மாநகராட்சி நிர்வாகமும், டெல்லி மாநில அரசும் சரியான முறையில் குடிநீர் விநியோகத்தை கையாளாமல் விட்டதே இந்த அவலத்திற்குக் காரணம் என்கிறார்கள்.
நிவாரணமில்லை...
பல காலமாகவே டெல்லியில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. தொடர்ந்து பற்றாக்குறை அதிகரித்தவண்ணம் உள்ளது. ஆனால் நிவாரணம்தான் கிடைக்கவில்லை.
கட்டுமானத் தொழிலுக்கும்...
கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டவர்கள் பெருமளவில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கும் இந்த டேங்கர் மாபியாக்கள்தான் கை கொடுக்கிறார்கள். அவர்கள் வைத்ததுதான் கட்டணம். ஆனாலும் மக்களுக்கு இவர்களை விட்டால் வேறு கதியில்லை.
போதுமானதாக இல்லை...
டெல்லிக்கு குடிநீர் சப்ளை செய்யும் டெல்லி ஜல் போர்டு தினசரி 900 டேங்கர்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்கிறது. ஆனால் இது போதுமானதாக இல்லை டெல்லி மக்களுக்கு.
ஏமாறும் மக்கள்...
இந்த டேங்கர்கள் ஒரு இடத்தில் கால் மணி நேரம் மட்டுமே நிற்கும். ஆனால் மக்கள் கூட்டம் அலை மோதும். கால் மணி நேரத்திற்குப் பின்னர் டேங்கர் கிளம்பிப் போய் விடும். மக்கள்தான் காலிக் குடத்துடன் ஏமாற்றமடைந்து நிற்பார்கள்.
ஒரு வாரத்திற்கு...
வசந்த் கஞ்ச் பகுதியில் ஒரு பெண் தலா 13 கேலன் கொள்ளளவு கொண்ட ஐந்து பிளாஸ்டிக் கேன்களை வைத்துள்ளார். அதில் கிடைக்கும் தண்ணீரை ரொப்பி வைத்துக் கொண்டு ஒரு வாரம் வரை சிக்கணமாக பயன்படுத்திக் காலம் தள்ளுகிறாராம்.
ஒருசில பகுதிகளில் மட்டும் தான்...
ஆனால் டெல்லி முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை என்று கூறுகிறார் ஜல் போர்டின் தலைவர் விஜய்குமார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஏதாவது சில பகுதிகளில் இருக்கலாம். ஆனால் முழு டெல்லியிலும் பஞ்மசம் இல்லை என்கிறார் இவர்.
அண்டை மாநிலங்கள் தான் காரணம்...
பக்கத்தில் இருக்கும் மாநிலங்கள் டெல்லிக்கு முறையாக தண்ணீர் தராமல் போனதால்தான் இந்த சிரமமான நிலை என்றும் விஜய்குமார் கூறுகிறார்.
2 பெரிய நதிகள் இருந்தும்...
இத்தனைக்கும் டெல்லிக்கு அருகிலேயே 2 பெரிய நதிகள் ஓடுகின்றன என்பதுதான் சோகமே. இரு நதிகள் இருந்தும் கூட டெல்லியில் தண்ணீர்ப் பஞ்சம் என்பது வியப்பாக உள்ளது.