101 ஆறுகளில் நீர்வழிப் பாதை- 5-ந் தேதி மசோதா தாக்கல்! பக்கிங்காம் கால்வாயிலும் போக்குவரத்து?
ஷில்லாங்: நாடு முழுவதும் 101 ஆறுகளை நீர்வழிப் பாதைகளாக மாற்றுவது தொடர்பான மசோதா நாடாளு மன்றத்தில் வரும் 5-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதில் ஆந்திரா- தமிழகம் இடையேயான ஆங்கிலேயர் காலத்து பக்கிங்காம் கால்வாய் போக்குவரத்து தொடர்பான அறிவிப்பும் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேகாலய மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் நிதின் கட்கரி கூறியதாவது:
உள் நாட்டு நீர்வழிப் பாதை மசோதா வரும் 5-ந் தேதி நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்படும். சாலை மற்றும் ரயில் போக்கு வரத்தை விட நீர்வழிப் போக்கு வரத்து சிக்கனமானது.
எனவே நீர்வழித் தடங்களை மேம்படுத்துவது அரசின் முன்னுரிமைப் பணியாக உள்ளது. இதுவரை 5 நதிநீர் வழித் தடங்கள் தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கு 101 வழித்தடங்கள் கண்டறியப் பட்டுள்ளன. நீர்வழிப் பாதையில் 1 கி.மீ. பயணத்துக்கு 50 பைசா மட்டுமே செலவாகிறது. இதுவே ரயில் போக்குவரத்தில் ரூ.1-ம், சாலைப் போக்குவரத்தில் ரூ.1.50-ம் செலவாகிறது.
எனவே நீர்வழிப் போக்குவரத்தை அரசு மேம்படுத்த உள்ளது. நாடு முழுவதும் ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், ஓடைகள் என 14,500 கி.மீ. தூரம் நீர்வழித் தடம் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கு ஏற்றதாக உள்ளது.
ஆனால் இதுவரை இது முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. எனவே நீர்வழித் தடங்களை நீர்வழிப் பாதைகளாக மாற்று வதுடன், உலர் துறைமுகங்கள், துணை துறைமுகங்கள் ஏற்படுத்தவும், பிரதமர் ஜல் மார்க் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.