தமிழகத்தைப் போல இந்தி திணிப்பு எதிராக மே.வங்கமும் போர்க்கோலம்!
கொல்கத்தா: மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை தமிழ்நாடு போலவே மேற்கு வங்கமும் மிகக் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது. வங்கமொழி படைப்பாளிகள், எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கையின் பெயரால் இந்தியை இந்தி பேசாத மாநிலங்கள் மீது திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது தொடர்பாக கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் இந்தி பேசாத மாநில் மாணவர்கள் 3-வது மொழியாக இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஓரணியில் ஒன்று திரண்டு போர்க்குரல் கொடுத்து வருகின்றன. இதேபோல் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.
கடும் எதிர்ப்புக்கு பின்னர் பணிந்தது மத்திய அரசு.. தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என அறிவிப்பு
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா என அத்தனை மாநிலங்களும் மத்திய அரசின் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த வரிசையில் மேற்கு வங்கமும் இணைந்துள்ளது.
மேற்கு வங்கத்தின் படைப்பாளிகள், எழுத்தாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இம்முயற்சியை மத்திய அரசு கைவிட வேன்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்தி பேசாத மாநிலங்களின் மொழிகளை வட இந்திய மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள முன்வருமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதேபோல் பல மொழிகள் பேசும் வட கிழக்கு மாநிலங்களிலும் இந்திக்கு எதிரான சலசலப்புகள் வெளிப்படுத்த தொடங்கி உள்ளன.