ஊடுருவல்காரர்களுடன் ஆதரிப்போரையும் வங்கதேசத்துக்கு அனுப்பனும்: சொல்வது மே.வ. பாஜக தலைவர் திலீப் கோஷ்
கொல்கத்தா: ஊடுவல்காரர்களுடன் சேர்த்து அவர்களை ஆதரிப்பவர்களையும் வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக இன்று பாஜக பிரமாண்ட பேரணியை நடத்தியது .மத்தியம்கிராம் நகரத்தில் இருந்து பரசாத் நகரம் வரை 5 கி.மீ தொலைவுக்கு இப்பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு தலைமை வகித்த மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியதாவது:
வங்கதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கான இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மதரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை மமதா பானர்ஜி ஏன் எதிர்க்கிறார்?
இன்னொரு பக்கம், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெற்று வாழ்கின்றனர். அவர்களுக்கு இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸும் ஆதரவு தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் இந்துக்கள் வாழ முடியாது என்கிற போது சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மட்டும் இங்கே எப்படி கோடிக்கணக்கில் வாழ உரிமை இருக்கிறது? சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் அவர்களை ஆதரிப்போரையும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இவ்வாறு திலீப் கோஷ் கூறினார்.
அவரது இந்த பேச்சுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் தபாஸ் ராய் கூறுகையில், இது போன்ற உளறல்களுக்காக திலீப் கோஷ் வெட்கப்பட வேண்டும் என்றார்.
இதனிடையே சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளன்று பேளூர் மடத்தில் சி.ஏ.ஏ.வை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதற்கு எதிராக ஹூக்ளி ஆற்றுப் பகுதியில் முகேஷ் குப்தா என்ற இளைஞர் நீச்சலடித்து எதிர்ப்பை பதிவு செய்தார். அவருக்கு மேற்கு வங்க அமைச்சர் அரூப் ராய் ஆதரவு தெரிவித்தார்.
மேலும் நீச்சல் போராட்டம் நடத்திய முகேஷ் குப்தா, அரசியல் லாபங்களுக்காக புனிதமான பேளூர் மடத்தை பிரதமர் மோடி அவமதித்துவிட்டார். அதனால் பேளூரில் இருந்து ஹூக்ளி ஆற்றில் நீச்சல் அடித்து போராட்டம் நடத்தினேன் என்றார்.