மேற்கு வங்க சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!
கொல்கத்தா: கேரளா, பஞ்சாப், ராஜஸ்தானை தொடர்ந்து மேற்கு வங்க சட்டசபையிலும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக முதன் முதலாக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டசபைகளிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் கேரளாவை பின்பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியிருந்தார்.
இந்நிலையில் சி..ஏ.ஏ. விவகாரத்தில் மவுனம் காத்து வந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக, தங்களது மாநில சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றுவோம் என அறிவித்தார். மேலும் சி.ஏ.ஏ.வை எதிர்க்கும் மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் விரைவில் ஹைதராபாத்தில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
அத்துடன் மத்திய அரசின் இந்த குடியுரிமை சட்ட திருத்தமானது 100% கடுமையான எதிர்ப்புக்குரியது. இதனை தனிப்பட்ட முறையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவித்தும் இருக்கிறேன் என கூறியிருந்தார் சந்திரசேகர ராவ்.
இதனிடையே மேற்கு வங்க சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றும் 4-வது மாநிலம் மேற்கு வங்கம்.
சி.ஏ.ஏ.வை எதிர்த்து பல்வேறு கட்ட பேரணிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. தற்போது மேற்கு வங்க சட்டசபையிலும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது மமதா அரசு.
மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி இம்மசோதாவை இன்று பிற்பகல் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
கேரளாவை போல சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் மேற்கு வங்க மாநில அரசு வழக்கு தொடரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.