3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின், 4 மாநில முதல்வர்களுக்கு மமதா நன்றி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றிய விவகாரத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் 4 மாநில முதல்வர்களுக்கு அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு வாகனம் தாக்குதலுக்குள்ளானது.
இந்த விவகாரத்தில் மேற்கு வங்க மாநில அரசின் தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. ஆனால் இருவரையும் டெல்லிக்கு அனுப்புவதில்லை என முதல்வர் மமதா பானர்ஜி திட்டவட்டமான முடிவை எடுத்தார்.
மேற்குவங்க மக்கள்.... மாற்றத்தை விரும்புறாங்க... அது நாங்கதான்... அமித்ஷா அதிரடி!
3ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
இதற்கு பதிலடியாக ஜேபி நட்டாவின் பாதுகாப்புக்கு பொறுப்பான 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு அதிரடியாக மாற்றியது மத்திய உள்துறை அமைச்சகம். இதனையும் நிராகரித்த மமதா பானர்ஜி, 3 ஐபிஎஸ் அதிகாரிகளையும் மாநில பணியில் இருந்து விடுவிக்கவில்லை. இது தொடர்பான நினைவூட்டல்களை மத்திய அரசும் அனுப்பி வைத்தது.
ஸ்டாலின் கண்டனம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு இடம்மாற்றம் செய்தது எதேச்சதிகாரமானது; கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது; மத்திய அரசு தம் விருப்பத்துக்கு குடிமைப் பணிகளில் ஆணையிடுதல் கூடாது; 3 அதிகாரிகள் இடமாற்ற உத்தரவை பிரதமர் மோடி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
4 மாநில முதல்வர்கள் ஆதரவு
இதேபோல் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரும் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனிடையே மு.க.ஸ்டாலின் மற்றும் 4 மாநில முதல்வர்களுக்கு மமதா பானர்ஜி நன்றி தெரிவித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மமதா பானர்ஜி நன்றி
மமதா பானர்ஜி தமது ட்விட்டர் பதிவில், போலீஸ் அதிகாரிகளை இடம்மாற்றம் செய்து மாநில அரசின் விவகாரங்களில் மத்திய அரசு வெட்கமின்றி தலையிட்டது. இதற்கு எதிராக மேற்கு வங்க மக்களின் பக்கம் நின்று, கூட்டாட்சிக்காக குரல் கொடுத்த முக ஸ்டாலின், பூபேஷ் பாகல், கேஜ்ரிவால், அமரீந்தர் சிங், அசோக் கெலாட் ஆகியோருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.