போஜ்புரி சினிமா ஸ்டில், குஜராத் கலவரம் படங்களை பரப்பி மே.வங்கத்தில் பீதி கிளப்பும் பாஜக- ஒருவர் கைது
மேற்கு வங்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் போலியான படங்களை வெளியிட்ட விஷமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் போஜ்புரி சினிமா ஸ்டில் மற்றும் குஜராத் கலவர படங்களை சமூக வலைதளங்களில் பாஜகவினர் பரப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது. போஜ்புரி சினிமா ஸ்டில்லை மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவமாக சித்தரித்த பாஜக ஆதரவு விஷமியை அம்மாநில போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தின் 24 பர்கானா மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. ஃபேஸ்புக் பதிவில் பதிவிடப்பட்ட ஒரு கருத்தே வன்முறைக்கு காரணமாக அமைந்தது.
ஆட்சி கவிழுப்பு கோஷம்
பாதுரியா என்ற இடத்தில் வெடித்த கலவரம் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதனால் மேற்கு வங்க அரசை கலைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.
|
குஜராத் கலவர படம்
இதனிடையே பாஜகவினர் சமூக வலைதளங்களில் போலியான புகைப்படங்களை வெளியிட்டு பதற்றத்தை உருவாக்குவது அம்பலமாகி உள்ளது. பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா கடந்த வெள்ளிக்கிழமையன்று தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் மேற்கு வங்கத்தில் வன்முறை என ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த படம் குஜராத் வன்முறைகளின் போது எடுக்கப்பட்டது என்பதை நெட்டிசன்கள் அம்பலப்படுத்தினர்.
போஜ்புரி சினிமா படம்
இதேபோல் பெண் ஒருவரின் சேலையை உருவும் படத்தையும் பாஜகவினர் பகிர்ந்திருந்தனர். மேற்கு வங்கத்தில் இப்படித்தான் நிகழ்கிறது என பதிவிட்டிருந்தனர். ஆனால் அது சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான போஜ்புரி சினிமா படக் காட்சி என்பதும் அம்பலமானது. இதை சுட்டிக்காட்டிய மேற்கு வங்க காவல்துறை ட்விட்டர் மூலம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் இந்த படத்தை பதிவிட்ட விஷமியையும் நேற்று மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைவர்கள் தடுப்பு
இதனிடையே கலவரம் பாதித்த பகுதிகளுக்கு செல்ல முயற்சிக்கும் பாஜக மற்றும் இடதுசாரித் தலைவர்கள் தடுக்கப்படுகின்றனர். அப்பகுதிக்கு செல்ல முயற்சிக்கும் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.