மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே ஓங்கி இருக்கும் மமதாவின் கை
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் மே மாதம் 5ம் தேதி வரை ஆறு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலின்போது பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.
வாக்கு எண்ணும் பணி மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 90 மையங்களில் நடந்து வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 78 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், இடது சாரிகளுக்கும் இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜக 291 இடங்களில் போட்டியிட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் தான் பல இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.