மே.வங்கத்தில் பாஜகவுக்கு வந்த சோதனை.. யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் பகிரங்க குடுமிபிடி சண்டை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களிடையே பகிரங்கமாக கடும் மோதல் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணிகள் படுதீவிரமாக உள்ளன. எப்படியும் மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
முதல்வர் வேட்பாளர் திலிப் கோஷ்
ஆனால் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பகிரங்கமாக மோதி வருகின்றனர். பாஜகவின் பிஷ்னாபூர் எம்.பி செளமித்ரா கான், மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ்தான் அடுத்த முதல்வராக ஆட்சியில் இருப்பார் என அண்மையில் பேசியிருந்தார்.
பாஜக தலைவர்கள் எதிர்ப்பு
அவரது இந்த பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர்களான கைலாஷ் விஜவர்கியா, சிவபிரகாஷ் மற்றும் அமிதவா சக்கரவர்த்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக திலிப் கோஷ் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. அப்போது, செளமித்ரா கான் நாவை அடக்கிக் கொண்டு பேச வேண்டும். இதேபோல் பேசிக் கொண்டிருந்தால் ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்புவோம் என எச்சரிக்கப்பட்டதாம்.
முதல்வர் வேட்பாளர்கள்
ஏற்கனவே மண்ணின் மைந்தர்தான் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் என பூடகமாகவே உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதனால் பாஜகவின் ஒவ்வொரு தலைவரும் முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இது கட்சிக்கு பெரும் நெருக்கடி என்கின்றனர் சில தலைவர்கள்.
முதல்வர் வேட்பாளர்களாக யாருக்கு வாய்ப்பு?
தற்போதைய நிலையில் ராஜ்யசபா எம்.பி ஸ்வபன் தாஸ்குபா, மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, எம்பி லோகேத் சட்டர்ஜி, திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி ஆகியோரில் ஒருவர் முதல்வர் வேட்பாளராக இருக்கலாம் என்கின்றன பாஜக வட்டாரங்கள். இதனிடையே 294 தொகுதிகளையும் சென்றடையும் வகையில் தேர்தலுக்கு முன்னதாக ஒற்றுமையாக ரத யாத்திரை நடத்துவது தொடர்பாகவும் பாஜக தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனராம்.