குடியுரிமை சட்ட நகல்: பட்டமளிப்பு விழாவில் கிழித்து இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கிய மே.வங்க மாணவி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த நகலை கிழித்து எறிந்து இன்குலாப் ஜிந்தாபாத் என மாணவி முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் நாள்தோறும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போலீசாரின் தடை உத்தரவுகளை மீறி மாணவர்களின் போராட்டங்கள் தொடருகின்றன.
இதேபோல் இஸ்லாமிய அமைப்புகள், மதச்சார்பற்ற கட்சிகளும் பெருந்திரளான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அத்துடன் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மேடைகளும் குடியுரிமை சட்ட எதிர்ப்புக்கான இடங்களாக மாறி வருகின்றன.
மாணவி ரபீஹா
புதுவை பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மாணவர்களின் ஒற்றுமைக்கு ஆதரவு தெரிவித்து கேரளா மாணவி ரபீஹா தமக்கு வழங்கப்பட்ட தங்க பதக்கத்தை பெற மறுத்தார். மாணவி ரிபிகாவின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜாதவ்பூர் பல்கலை.
இதேபோல் மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக் கழகமும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடி வருகிறது. இப்பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
திரும்பிப் போன ஆளுநர்
இதற்காக மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் வருகை தந்திருந்தார். ஆனால் அவரை விழா மேடைக்கு செல்ல விடாமல் கறுப்பு கொடியுடன் 2 மணி நேரம் மாணவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் ஆளுநர் ஜெகதீப் தன்கர், நிகழ்ச்சியில் பங்கேற்காமலேயே திரும்பி செல்ல நேர்ந்தது.
சட்ட நகல் கிழிப்பு
இதனிடையே ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் பதக்கம் பெற மேடை ஏறிய மாணவி டேப்ஸ்மிதா சவுத்ரி, குடியுரிமை சட்ட திருத்தத்தையும் என்.ஆர்.சி.யையும் தாம் எதிர்ப்பதாகவும் அரசிடம் எந்த ஒரு ஆவணத்தையும் தர முடியாது என்றும் அறிவித்தார். அத்துடன் தமது கையில் வைத்திருந்த குடியுரிமை சட்ட திருத்த நகலை விழா மேடையில் கிழித்து எறிந்தார்.
மாணவியின் முழக்கம்
அப்போது இன்குலாப் ஜிந்தாபாத் என்றும் டேப்ஸ்மிதா முழங்கினார். இதன் பின்னரே தமக்கான பட்டத்தைப் பெற்றுவிட்டு திரும்பினார். இதனால் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர் ஒருவரும் பட்டம் பெற மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.