சமாஜ்வாதி - பகுஜன்சமாஜ் கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம்.. உபி முதல்வர் விளக்கம்
சமாஜ்வாதி - பகுஜன்சமாஜ் கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ: சமாஜ்வாதி - பகுஜன்சமாஜ் கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 11 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் சுமார் 59,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சமாஜ்வாதி வெற்றி
இதேபோல் கோரக்பூர் தொகுதியிலும் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் 21000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கூறப்படுவது கோரக்பூர்.
5 முறை எம்பியாக
கோரக்பூர் தொகுதியில் இருந்து 5 முறை எம்பியாக ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச முதல்வரானதை அடுத்து தனது எம்பி பதவியை யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
ஆதித்யநாத் கருத்து
இந்நிலையில் இரு தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். புல்பூர், கோரக்பூர் இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
குறைவாக மதிப்பிட்டதே
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து ஆராயப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் என்றும் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.