பாய்லின் புயல்: ஒடிசாவில் அதிக உயிர்சேதத்தை தவிர்க்க உதவியவர்களுக்கு நன்றி: நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்: அதிக உயிர்ச்சேதம் இல்லாமல் பாய்லின் புயலில் இருந்து ஒடிசாவை காப்பாற்றிய அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.
கடந்த சனிக்கிழமையன்று ஒடிசா மாநிலம் கோபால்பூரை 220 கி.மீ. வேகம் வரை தாக்கிய அதிகவேக பாய்லின் புயலுக்கு கிட்டத்தட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர். புயலில் சிக்கி மொத்தம் 12 மாவட்டங்களை சேர்ந்த 14 514 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கனமழையால் 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயரிடப்பட்டிருந்த ரூ. 2400 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், பாய்லின் புயலில் சிக்கி அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்படா வண்ணம் காத்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.
மேலும், இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ‘ஒடிசாவை அதிகவேகப்புயலான பாய்லின் தாக்கியது. இந்த புயலில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென்பது நம்முடைய முக்கிய நோக்கமாக இருந்தது. இதை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 9 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இல்லாவிடில் மிகப்பெரிய அளவிலான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
பல ஆயிரம் கோடி சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் உடனடியாக செய்துகொடுக்கப்படும்' என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.