பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு கவலையில்லை.. தம்பிதுரை தடாலடி!
பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லி: பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில், இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகள் பங்கேற்கின்றன. திமுக சார்பாக டிகேஎஸ் இளங்கோவன் அதிமுக சார்பாக தம்பிதுரையும் பங்கேற்றனர்.
தம்பிதுரை
டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார்.
ஒரு பெயர்கூட விடுபடக்கூடாது
அப்போது கூறியதாவது, அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்க வலியுறுத்தினோம். வாக்காளர் பட்டியலில் தகுதியான ஒருவர் பெயர்கூட விடுபடக்கூடாது என கோரினோம்.
கூட்டணியில் இல்லை
வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டால் அதிமுகவுக்கு ஆட்சேபனை இல்லை. மேலும் அதிமுக - பாஜக கூட்டணியில் இல்லை.
அதிமுகவுக்கு கவலையில்லை
பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு கவலையில்லை என்றும் தம்பிதுரை தெரிவித்தார். சென்னையில் 30 ஆம் தேதி நடைபெறும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவுள்ள நிலையில் தம்பிதுரை இவ்வாறு கூறியுள்ளார்.