நம்பிக்கையில்லாத் தீர்மானம் தானே.... கொண்டு வரட்டும் பார்க்கலாம்: அசராத அமித் ஷா
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் தான் முடியும் என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்திருக்கும் நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா அந்த நடவடிக்கை தோல்வியில் தான் முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் இல்லாததாலும், அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததாலும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க.,வின் கூட்டணியில் இருந்து விலகியது.
இதனையடுத்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதனை தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்து உள்ளன.
இதனால் விரைவில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வந்தாலும், தோல்வி நிச்சயம் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், தோல்வியை முன்கூட்டியே தெரிந்ததால் தான் முறையான விவாதத்திற்கு வராமல், தேவையில்லாமல் நாடாளுமன்றத்தை முடக்கும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.