நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் சந்திக்க தயார்.. மபி முதல்வர் கமல்நாத் அசால்ட் பேச்சு!
போபால்: சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயார் என மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களை பிடித்தது. ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்கள் அகிலேஷின் சமாஜ்வாதி உறுப்பினர் ஒருவர் ஆதரவுடன் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
பா.ஜ.க 109 இடங்களில் வென்றது. இது தவிர 4 சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக வந்தது.
நம்பாதீங்க.. எக்ஸிட் போல் நோக்கமே வேற.. தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி அதிரடி ஆடியோ மெசேஜ்
பாஜக வலியுறுத்தல்
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவா காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென்னுக்கு நேற்று கடிதம் எழுதினார். மேலும் அவர் கூறும்போது, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்துமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
காங். ஆட்சி கவிழும்
விவசாயக் கடன் தள்ளுபடி, அரசின் பலம் குறித்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதத்தின்போது நிதி தொடர்பான கோரிக்கைகள் குறித்து எழுப்பப்பட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தோல்வியடைந்தால் ஆட்சி கவிழும் என்றார்.
சந்திக்க தயார்
இந்நிலையில் எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் கமல்நாத் பதில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, மத்திய பிரதேச சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார். எங்களுக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இருக்கிறது.
நிரூபிப்போம்
ஆட்சியை கலைக்க பா.ஜ.க நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் நாங்கள் 4 முறையாவது பெரும்பான்மையை நிரூபித்திருப்போம். வாக்கெடுப்பு நடந்தால் அதில் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். இவ்வாறு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கூறினார்.