இந்தியாவில் வலுவான கூட்டாட்சி உருவாக வேண்டும்: மமதா பானர்ஜி
இந்தியாவில் வலுவான கூட்டாட்சி உருவாக வேண்டும் என்கிறார் மமதா பானர்ஜி.
கொல்கத்தா: நாட்டில் வலுவான கூட்டாட்சியை உருவாக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக 3-வது அணி அமைக்க வேண்டும் என குரல் கொடுத்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ். இதற்கு ஆதரவுக் கரம் நீட்டினார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
இதையடுத்து மமதா பானர்ஜியை கொல்கத்தாவில் இன்று சந்திரசேகர் ராவ் சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் சந்திரசேகர் ராவ் கூறியதாவது:
3 வது அணிக்கு முயற்சி
பாஜக, காங்கிரஸுக்கு மாற்று தேவை. ஆகையால் 3-வது அணியை அமைக்க முயற்சித்து வருகிறோம்,.
தலைவர்களுடன் சந்திப்பு
இதர அரசியல் கட்சித் தலைவர்களையும் விரைவில் சந்திப்போம். நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறினார்.
வலிமையான மாநிலங்கள்
மமதா பானர்ஜி கூறுகையில், 71 ஆண்டுகாலமாக நீடித்து வரும் அரசியல் போக்கை மாற்ற நினைக்கிறோம். மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான் மத்திய அரசு வலிமையாக இருக்கும்.
தேவை வலுவான கூட்டாட்சி
நமக்கு தேவை வலிமையான கூட்டணி ஆட்சி. தற்போது வலுவான கூட்டணியை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம் என்றார் மமதா.