ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 8 அணு உலைகள் அமைக்கப்படும் - பிரதமர் மோடி #BRICS2016
கோவா: இந்தியா-ரஷ்யா இடையே பொருளாதாரம், பாதுகாப்பு துறையில் வருங்காலங்களில் ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்தார். தற்போது செயல்படும் 2 அணு உலைகள் உட்பட மேலும் ரஷ்யாவிடம் இருந்து மேலும் புதிதாக 8 அணு உலைகள் பெறுவதற்காக திட்டத்தை இந்தியா முன்வைக்கிறது என்றும் மோடி கூறியுள்ளார்.
கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்துள்ளார். முதல் நிகழ்வாக இந்தியா - ரஷ்யா வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் புடின் மற்றும் மோடி கலந்து கொண்டனர்.
இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு மற்றும் ஆலோசனைக்கு பிறகு இந்தியா - ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில் கூடங்குளம் புதிய அணுஉலை, ஹரியானா மற்றும் ஆந்திராவில் ஸ்மார்ட் சிட்டி, சைபர் பாதுகாப்பு, அறிவியல்-தொழில்நுட்பம் ஒப்பந்தம், போர் தளவாடங்கள் கொள்முதல் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இன்று கையெழுத்தான ஒப்பந்தங்களில் ரூ.39,000 கோடி மதிப்பிலான அதிநவீன ஏவுகணை வாங்கும் ஒப்பந்தமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
8 அணு உலைகள்
நிகழ்ச்சியில் பேசிய மோடி, "ரஷ்யாவிடம் இருந்து மேலும் புதிதாக 8 அணு உலைகள் பெறுவதற்காக திட்டத்தை இந்தியா முன்வைக்கிறது. ஹைட்ரோகார்பன் துறையில் இந்திய பங்களிப்பு அதிகரிக்கப்படும் என்று கூறினார்.
ரஷ்யா ஆதரவு
இந்தியா -ரஷ்யா இடையே சிறப்பான நட்புறவு நீடிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் துல்லிய தாக்குதல் உட்பட அனைத்து நடவடிக்கைக்கும் ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகின்றன என்று மோடி கூறினார்.
நீடிக்கும் நட்புறவு
இந்தியா ரஷ்யா இடையிலான நட்புக்கு கூடங்குளம் அணு உலை ஆதாரமாக விளங்குவதாக மோடி பெருமிதத்துடன் கூறினார். இந்தியாவை போல் ரஷ்யாவும் பயங்கரவாதத்தை எதிர்த்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
ரூ.40 ஆயிரம் கோடி
கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணுஉலைகளை இந்திய அணுசக்தி கழகம் ரூ.39,747 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது. இந்த 2 அணு உலைகளிலும் 2022ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு அணு உலைகளில் உற்பத்தி
கூடங்குளத்தில் முதலாவது அணுஉலையில் இதுவரை 12,300 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆய்வு பணிகளுக்காக 2வது அணு உலையில் மின் உற்பத்தி கடந்த மாதம் 7ம் தேதி நிறுத்தப்பட்டது. அணு உலையின் அனைத்து அமைப்புகளின் செயல்திறனை ஆய்வு செய்த பின், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதலைப் பெற்று, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.14 மணிக்கு இந்த அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.